பொன்.மாணிக்கவேல் கோரிக்கை: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை:
3 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை வடக்கு மண்டல ஐ.ஜி. ஜாங்கிட் விசாரிக்க தடை கோரி கோவை மாவட்டமுன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
செங்கை கிழக்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக முன்பு பணியாற்றியவர் பொன்.மாணிக்கவேல். அப்போது 3 விசாரணைக்கைதிகள் கிழக்குக் கடற்கரைச் சாலை அருகே உள்ள உத்தண்டி என்ற இடத்தில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இது திட்டமிட்ட படுகொலை, பொன். மாணிக்கவேலுவின் உத்தரவின் பேரில்தான் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக கைதிகள் 2 பேரின்சகோதரியான பொம்மி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 3 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை வடக்கு மண்டல ஐ.ஜி. ஜாங்கிட்விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஜாங்கிட் விசாரணையை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் பொன். மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், நான் செங்கை கிழக்கு மாவட்டகாவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்தபோது எனக்கு உயர் அதிகாரியாக இருந்தவர் ஜாங்கிட். அப்போது பணி தொடர்பாக எனக்கும்,அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. என்னைப் பற்றி டிஜிபியிடம் புகார் கூறுவேன் என்று ஜாங்கிட் என்னைமிரட்டியுள்ளார்.
தற்போது நான் சம்பந்தப்பட்ட வழக்கை அவர் விசாரித்தால், பழைய பழி வாங்கும் உணர்ச்சியில் எனக்கு எதிராக இந்த வழக்கை திசைதிருப்பும் வாய்ப்பு உள்ளது. எனக்கு நீதி கிடைக்காது. எனவே ஜாங்கிட் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் பொன்.மாணிக்கவேலின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இம்மனு மீதானவிசாரணையை வருகிற 27ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அதிரடி காவல்துறை அதிகாரியான பொன்.மாணிக்கவேல் கோவை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.சமீபத்தில்தான் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.