தலித்துகளுக்கு நில உரிமை மாநாடு: டாக்டர் கிருஷ்ணசாமி
மதுரை:
தமிழகம் முழுவதும் உள்ள தலித் மக்களுக்கு நிலம் வழங்கக் கோரி 9 மாவட்டங்களில் மாநாடு நடத்த புதிய தமிழகம் கட்சி முடிவுசெய்துள்ளதாக அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தலித் மக்களின் வறுமை, வாழ்நிலையை சீர்படுத்த மத்திய, மாநில அரசுகள்எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாடு சுதந்தரமடைந்தது முதல் பல்வேறு திட்டங்களை இரு அரசுகளும் தீட்டிஅமல்படுத்தின, ஆனால் அவை எந்தப் பயனையும் அவர்களுக்கு அளிக்கவில்லை.தொடர்ந்து அவர்களது வாழ்நிலை மோசமாகத்தான் உள்ளது. இதை மாற்ற தலித்துகளுக்கு நிலம் வழங்குவது ஒன்றுதான் சரியானவழியாகும். நிரந்தரத் தீர்வாகவும் இருக்கும்.
தலித் மக்களுக்கு நிலவுரிமை வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். இதை வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில்,வருகிற அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை 9 மாவட்ட மாநாடுகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.
முதல் மாநாடு அக்டோபர் 16ம் தேதி ராஜபாளையத்தில் நடைபெறும். அதைத் தொடர்ந்து சங்கரன்கோவில், பரமக்குடி,நாமக்கல், தேனி, வாடிப்பட்டி, நிலக்கோட்டை, கயத்தாறு, மானாமதுரை ஆகிய ஊர்களில் மாநாடுகள் நடத்தப்படும். மொத்தம் 9மாவட்டங்களை இந்த மாநாடு உள்ளடக்கும் என்றார் அவர்.