காலை உணவுடன் மாணவர்களுக்கு சூடான பால்! புதுவையில் அறிமுகம்
பாண்டிச்சேரி:
அக்டோபர் 2ம் தேதி முதல் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாவதுவகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு சூடான பால் கொடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், காந்தி ஜெயந்தி தினம் முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8வது வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவியருக்கு சூடான பால் வழங்கப்படும்.இந்தக் குழந்தைகளுக்கு ஏற்கனவே ராஜீவ் காந்தி இலவச காலை உணவுத் திட்டத்தின் மூலம் காலை உணவு வழங்கப்படுகிறது.தற்போது கூடுதலாக பாலும் வழங்கப்படும். இதன் மூலம் 1.26 லட்சம் மாணவ, மாணவியர் பலன் பெறுவர். பாலுக்காககூடுதலாக ரூ. 2.83 கோடி செலவிடப்படும்.
மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே 1.26 லட்சம் மாணவ, மாணவியர் பலனடைந்து வருகிறார்கள். இது 12வது வகுப்புவரை கொடுக்கப்படுகிறது. மதிய உணவுக்காக ஆண்டுதோறும் ரூ. 8.97 கோடி ரூபாயும், காலை உணவுக்காக ரூ. 10.25 கோடியும்செலவிடப்படுகிறது என்றார் ரங்கசாமி.
இதுதவிர மேலும் பல சலுகை அறிவிப்புகளையும் அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.