காந்தி கொலை: ஆர்எஸ்எஸ்சை தொடர்புபடுத்தும் பாடத்தை நீக்கக் கோரி வழக்கு
சென்னை:
பிளஸ் டூ வரலாற்றுப் பாடத்தில், காந்தியடிகளின் கொலையுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடர்புப்படுத்தி பிரசுரிக்கப்பட்டுள்ளவாசகத்தை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக ஆர்எஸ்எஸ் தலைவர் மாரிமுத்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆர்எஸ்எஸ் வன்முறையில் ஈடுபடுவதும் இல்லை.அப்படி யாராவது ஈடுபட்டால் அவர்களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பில் இடமும் இல்லை.
நாட்டுப் பற்று கொண்டவர்களைக் கொண்ட அமைப்பு இது. இதன் கூட்டங்களில் மகாத்மா காந்தியும் கலந்து கொண்டிருக்கிறார்.எங்கள் அமைப்பும் காந்தியை மதித்து வருகிறது.
ஆர்எஸ்எஸ்ஸை பிடிக்காதவர்கள் தான் காந்தியின் கொலைக்கு ஆர்எஸ்எஸ்சே காரணம் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாகசீதாராம் கேசரி, அர்ஜூன் சிங் ஆகியோர் மீது வழக்குப் போட்டு அவை நிலுவையில் உள்ளன.
இந் நிலையில் தமிழக அரசு இந்தக் கல்வியாண்டில் பிளஸ் டூ வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் சுதந்திரத்துக்குப் பின் இந்தியா என்றதலைப்பில் பாடம் ஒன்றை சேர்த்துள்ளது. 157வது பக்கத்தில் உள்ள இந்தப் பாடத்தில் காந்தியைக் கொன்றவர் ஆர்எஸ்எஸ்அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
இது தவறான தகவலாகும். வரலாறே தெரியாமல் இதை எழுதியுள்ளார்கள். கள்ளம், கபடம் இல்லாத மாணவர்கள் இடையேஇந்தப் பொய்யான செய்தியை கூறுவதன் மூலம் அவர்களது மனதை கெடுக்கிறார்கள்.
காந்தி கொலைக்கும் ஆர்எஸ்எஸ்சுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு இடம் பெற்றுள்ள வாசகத்தை நீக்கக் கோரிமுதல்வருக்கு மனு அனுப்பியும் பலன் இல்லை.
எனவே இதில் நீதிமன்றம் தலையிட்டு, இந்தப் பாடத்தை ஆசிரியர்கள் கற்றுத் தர தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி முருகேசன் இது குறித்து இரு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications