குஷ்புவுக்கு எதிராக செருப்பு, துடைப்பத்துடன் போராட்டம்
சென்னை:
தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து மிகவும் அநாகரீகமாக பேட்டி கொடுத்துள்ள நடிகை குஷ்புவுக்கு எதிராக விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பினர் இன்று அவரது வீட்டின் முன்பு திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.
அதே போல பாமகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனது கருத்துக்களுக்காக குஷ்பு பகிரங்கமாக மன்னிப்புகேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சிஅறிவித்துள்ளது.
இந்தியா டுடேவுக்கு குஷ்பு அளித்துள்ள பேட்டியில், படித்த ஆண்கள் தான் மணம் முடிக்கப் போகும் பெண் கன்னித்தன்மைஉள்ளவளாக இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.
மேலும் தமிழகப் பெண்கள் செக்ஸ் சுதந்திரம் பெற்று வருவதாகவும், திருமணத்திற்கு முன்பே பெண்கள் உடலுறவு வைத்துக்கொள்வதில் தவறில்லை என்ற கருத்தை பிரதிபலிக்கும் வகையிலும் குஷ்புவின் பேட்டி அளித்திருந்தார்.
குஷ்புவின் இந்தப் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கர்பச்சான் விவகாரத்தால் கூனிக் குறுகிப் போயிருந்த பலர்,தங்கரை தாறுமாறாக நடிகர் சங்கத்தில் வைத்து விமர்சித்த குஷ்புவுக்கு எதிராக களம் இறங்க சரியான காரணத்தை எதிர்பார்த்துக்காத்திருந்தார்கள்.
இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதால் அவர்கள் முழு வீச்சில் களமிறங்கியுள்ளனர்.
செருப்பு, துடைப்பத்துடன் போராட்டம்:
குஷ்புவுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் நேற்று நடிகர் சங்கம் முன்பு கூடி போராட்டம் நடத்தினர். துடைப்பம்,பழைய செருப்பு உள்ளிட்டவைகளுடன் அவர்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டின் முன்பு போராட்டம்:
இன்று அவர்கள் நூற்றுக்கணக்கில் சென்னை அபிராமபுரத்தில் உள்ள குஷ்புவின் வீட்டின் முன்பு திரண்டு போராட்டத்தில்குதித்தனர்.
குஷ்பு போல வேடம் அணிந்த ஒருவரை கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக அவர்கள் குஷ்பு வீட்டை நோக்கி அழைத்து வந்தனர்.பின்னர் கூட்டத்தில் வந்த பெண்கள் கைகளில் துடைப்பம், செருப்பு போன்றவற்றுடன் வீட்டுக்கு எதிரே அமர்ந்து போராட்டத்தில்குதித்தனர்.
குஷ்புவை உடனடியாக கைது செய்து அவரை தமிழகத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.ஒரு பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில், தமிழக பெண்களை அவதூறாக பேசியுள்ள குஷ்பு இனிமேல் எந்தத் தமிழ்ப்படத்திலும் நடிக்கக் கூடாது, அவரை தமிழகத்திற்குள் இருக்க அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் ஆவேசமாககோஷமிட்டனர்.
இதற்கிடையே குஷ்புவுக்கு எதிராக பாமகவும் போராட்டத்தில் குதிக்கவுள்ளது. இதுகுறித்து பாமக மகளிர் சங்க தலைவி சக்திகமலாம்பாள் விடுத்துள்ள அறிக்கையில், நடிகை குஷ்பு கூறியுள்ள கருத்துக்கள் தமிழ் சமுதாயத்தையும், தமிழர்களின்வாழ்முறையையும் கேவலப்படுத்துவதாக, இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
அவரது கருத்தைக் கண்டித்து அவரது வீட்டு முன்பு மகளிர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்துவோம். தான் கூறியுள்ளகருத்துக்களுக்காக குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி அவர் கேட்காவிட்டால், தமிழகம் முழுவதும்குஷ்புவுக்கு எதிராக பிரமாண்டமான அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
பாமக போராட்டம்:
இதேபோல சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மகளிர் சங்கம் சார்பில் ஏராளமான பெண்கள் கூடி குஷ்புவின் உருவ பொம்மையைஎரித்தனர்.