ஓகேனக்கல்: போனான் வீரப்பன்... வந்தது கர்நாடகம்
ஓகேனக்கல்:
தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கலில் சர்ச்சைக்குரிய பகுதியில் தமிழக அதிகாரிகள் மீண்டும் சர்வே பணியைத் தொடங்கியுள்ளனர்.
இங்கு மத்திய சர்வேத்துறை மீண்டும் நில அளவையில் ஈடுபடவுள்ள நிலையில், தமிழகமும் இந்தப் பணியைத் துவக்கியுள்ளது.சுற்றுலாத் தளமான ஓகேனக்கலின் பல்வேறு பகுதிகளை கர்நாடகம் உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளது. அங்கு தமிழக அரசின்சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை கர்நாடக அதிகாரிகள் தடுத்து நிறுத்தி ரகளை செய்துள்ளனர். மேலும் பல கன்னடஅமைப்புகளும் ஓகேனகல்லுக்குள் ஊடுறுவப் போவதாக மிரட்டி வருகின்றன.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு தமிழக மற்றும் கர்நாடக அதிகாரிகள் இணைந்து எல்லைப் பகுதி தொடர்பாககூட்டாக சர்வே மேற்கொண்டனர். அதில் கர்நாடகம் கோரும் பகுதிகள் தமிழக எல்லைக்குள்தான் இருப்பது உறுதியானது.
ஆனால், இந்த சர்வே முடிவை கர்நாடக அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.
இரு மாநிலங்களுக்கு இடையே இந்தப் பிரச்சனையால் பதற்றம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடமுடிவு செய்துள்ளது.
மத்திய அரசு அதிகாரிகள் குழு ஓகேனக்கல்லில் புதிய சர்வே நடத்த முடிவு செய்துள்ளனர்.
இச் சூழ்நிலையில் தமிழக அதிகாரிகள் சர்ச்சைக்குரிய பகுதியில் இன்று மீண்டும் சர்வே பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
இந்தப் பணிகளுக்கு கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சர்வே பணிகள் நடந்து வருகின்றன.மேலும், கன்னட வெறியரான வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட சாளுவாளி அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) ஓகனேக்கலுக்குள் ஊடுறுவப் போவதாக அறிவித்துள்ளதால், சர்ச்சைக்குரிய பகுதி முழுவதும் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் உயிருடன் இருந்தவரை ஓகேனக்கல் பக்கமே கர்நாடக அதிகாரிகளும், போலீஸாரும் எட்டிப் பார்த்ததில்லை.தற்போது வீரப்பன் இல்லாத காரணத்தாலும், ஓகேனக்கலுக்கு வரும் சுற்றுலா வருமானத்தைக் குறி வைத்தும் தற்போது பிரச்சினையைக்கிளப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications