குடிகார வாலிபரால் மதம் பிடித்த யானை
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே குடித்து விட்டு வந்த வாலிபரிடமிருந்து கிளம்பிய மது வாடையால் வெகுண்டயானை மதம் பிடித்து சுமார் 5 கி.மீ தொலைவுக்கு தாறுமாறாக ஓடி பொது மக்களை பீதிக்குள்ளாக்கியது.
ஆண்டுதோறும் கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த சமயத்தில்,பத்மநாபபுரம் (கன்னியாகுமரி மாவட்டம்) அரண்மனையிலிருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்குக் கொண்டுசெல்லப்படும்.இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி நேற்று பத்நாபபுரம் அரண்மனையிலிருந்து சாமி ஊர்வலம் தொடங்கியது.கார்த்திகேயன் என்ற யானை மீது சரஸ்வதி சிலை கொண்டு செல்லப்பட்டது. மற்ற சாமி சிலைகள் பல்லக்கிலும் கொண்டுவரப்பட்டன.
மாலை 4.30 மணியளவில் குழித்துறை அருகே காட்டாத்துறை என்ற இடத்தில் ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது, குடித்துவிட்டு மது போதையில் வந்த ஒரு வாலிபர், யானையின் அருகே சென்று நின்றார்.
அவரிடமிருந்து கிளம்பிய மது வாடையால் வெகுண்ட யானை தாறுமாறாக ஓடத் தொடங்கியது.
குடிகார வாலிபரை தனது துதிக்கையால் தாக்கி வீசிய யானை கால் போன போக்கில் ஓட ஆரம்பித்தது. பலத்த பிளிறலுடன்ஓடிய யானையைப் பார்த்து பயந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். இதையடுத்து சாலையோர கடைகள் அடைக்கப்பட்டன.
கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கு மதம் பிடித்து தாறுமாறாக ஓடியது அந்த யானை.
யானையைக் கட்டுப்படுத்த பொதுமக்களில் சிலர் பழம், தேங்காயை வீசிப் பார்த்தனர். ஆனால் எதற்கும் மசியாத யானை,மார்த்தாண்டம் வந்து தான் சற்றே சாந்தி அடைந்து நின்றது.
பின்னர் யானையை ஒரு பனை மரத்தில் கட்டி மதத்தை குறைத்தனர். யானை கார்த்திகேயனுக்கு மது வாடை பிடிக்காதாம்.எனவேதான் மதம் பிடித்து தாறுமாறாக ஓடி பீதியை ஏற்படுத்தி விட்டதாக யானைப் பாகன் கூறினார்.
இந்த களேபரத்தால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையில் சுமார் 1 மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது,போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications