திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள்: ராமதாஸ் முயற்சி
சென்னை:
திமுக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டேன் என்று மீண்டும் திட்டவட்டமாக அறிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ்,கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளையும் சேர்க்க முயற்சிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு சீட் ஒதுக்க கருணாநிதி மறுத்ததால், தனித்துப் போட்டியிட்டது அக்கட்சி. அதிலிருந்து திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார் வி.சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன்.இந் நிலையில் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் முயற்சியால் ராமதாசும், திருமாவளவனும் இணைந்தனர். இதன்மூலம் வட மாவட்டங்களில் வன்னியர்-தலித்களுக்கி இடையே அவ்வப்போது நடந்து வந்த மோதல்கள் பெருமளவில்குறைந்தன.
இதைத் தொடர்ந்து மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், நெடுமாறன் ஆகியோருடன் இணைந்து தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தை ஆரம்பித்தனர் ராமதாசும் திருமாவளவனும்.
இதில் சேதுராமன் தொடர்ந்து திமுகவை ஆதரித்து வருகிறார். இந் நிலையில் திமுக கூட்டணியில் இருந்து ராமதாஸ்வெளியேறுவார் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், இவை உளவுப் பிரிவு போலீசார் உதவியுடன் அதிமுக பரப்பிவரும் செய்தி என ராமதாசும் கருணாநிதியும் கூறி வருகின்றனர்.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,
திமுக தலைமையிலான கூட்டணியை விட்டு விலகும் பேசுக்கே இடமில்லை. சொல்லப் போனால் கூட்டணியை பலப்படுத்தும்வேலைகளில் நான் ஈடுபட்டுள்ளேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளையும் சேர்த்துகூட்டணியை விரிவாக்க முயற்சித்து வருகிறேன்.
தமிழகத்தில் நிதி நிலை சீரடைந்துவிட்டதாக அமைச்சர்கள் வாய் கிழிய பேசுகிறார்கள். இந்த ஆண்டுக்கான மத்திய தணிக்கைத்துறை அதிகாரியின் அறிக்கையைப் பார்த்தால் உண்மை தெரியும். தமிழகத்தில் நிதி நிர்வாகம் மோசமாக உள்ளதை மிகத்தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளது அந்த அறிக்கை என்றார் ராமதாஸ்.