உழவர் மாநாடு: நேரு ஸ்டேடியத்தை பயன்படுத்த அரசுக்கு நீதிமன்றம் கடும் நிபந்தனை
சென்னை:
சட்டமன்றத் தேர்தல் வருவதால் விவசாயிகளின் ஓட்டுக்களை மனதில் வைத்து இன்று மாநில உழவர் மாநாட்டை அதிமுக அரசுநடத்துகிறது.
இதில் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கவும் அதிமுக திட்டமிட்டுள்ளது.உழவர் மாநாட்டுடன், விவசாயிகளுக்கான விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொருட்காட்சியும்நடத்தப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கானவிவசாயிகளை அமைச்சர்கள், அதிகாரிகள் சென்னையில் கொண்டு வந்து குவித்துள்ளனர்.
சுமார் 50,000 பேர் வரை பங்கேற்கவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு ரூ. 17 கோடி வரை அரசுப் பணம் செலவிடப்படும் என்று தெரிகிறது.நேரு ஸ்டேடியத்தின் திறந்தவெளி அரங்கில் இம் மாநாடு நடக்கிறது.
முன்னதாக கருணாநிதி முதல்வராக இருந்தபோது நேரு விளையாட்டு அரங்கில் அவருக்கு நடத்தப்பட இருந்த விழாவை எதிர்த்துவழக்குப் போட்டார் ஜெயலலிதா. அப்போது விளையாட்டுப் போட்டிகள் தவிர வேறு நிகழ்ச்சிகளை இங்கு நடத்தக் கூடாது எனஉச்சநீதிமன்றம் கூறியது.
இதையடுத்து விழாவை வெளி அரங்குக்குப் பதிலாக அந்த விழா உள் அரங்கில் நடத்தப்பட்டது.
இந் நிலையில் அதே வெளி அரங்கில் தான் உழவர் விழாவை ஜெயலலிதா நடத்துவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குப்போடப்பட்டது. இந்த மனுவின் மீது நேற்று நீதிபதி தினகரன், நீதிபதி தணிகாசலம் ஆகியோர் அளித்த தீர்ப்பில்,
நேரு விளையாட்டு அரங்கில் உழவர் மாநாட்டை நடத்துவதே அரசின் முக்கிய நோக்கமாகத் தெரிகிறது. அதையொட்டிவிவசாயிகளுக்கான விளையாட்டுப் போட்டி நடத்துவது துணை நிகழ்ச்சி தான்.
இந்த அரங்கில் விளையாட்டுப் போட்டிகள் தவிர வேறு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அரசும் வேறு நிகழ்ச்சிகளை இங்கு நடத்தக் கூடாது என்பது தான் அந்தத் தீர்ப்பின் அர்த்தம்.
இது தொடர்பான தடை விதித்து மாநில அரசும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இப்போது அந்தத் தடையை விளையாட்டுத்துறைசார்பில் ஒரு உத்தரவைப் பிறப்பித்து அரசு தளர்த்தியுள்ளது. நேரடியாக செய்ய முடியாததை இது போன்ற உத்தரவு மூலம்மறைமுகமாக செய்துள்ளது அரசு. இது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வெளியிடப்பட்டு உத்தரவு. எனவேவிளையாட்டுத்துறையின் அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
நேரு விளையாட்டு அரங்கை வேறு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதித்தால் அதன் சர்வதேசத் தரம் பாதிக்கப்படும். இதை உணர்ந்துஇந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு அரசு தான் முன் மாதிரியாக இருக்க வேண்டும்.
இந்த மாநாட்டில் 50,000 விவசாயிகள் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் கடைசி நேரத்தில் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக நிபந்தனைகளுடன் அந்த அரங்கில் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கிறோம்.
அரங்கின் தட களத்தில் (வெளி அரங்கில்) விளையாட்டுப் போட்டிகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். வேறு நிகழ்ச்சிகளைஇயற்கையான மண் தரையிலேயே அதற்கு பாதிப்பு ஏற்படாமல் நடத்த வேண்டும். இதனால் தடகளத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது.
அரங்கில் மேடைகள், வரவேற்பு வளைவுகள் அமைக்கக் கூடாது. பள்ளம் தோண்டக் கூடாது. அங்கு அரசியல் கட்சிக் கொடிகள்பறக்கக் கூடாது.
கேலரியில் உள்ள இருக்கைககளில் மட்டுமே பார்வையாளர்கள் அமர வேண்டும்.
மண் தரையிலும், சிந்தடிக் தளத்திலும் மேடை ஏதும் அமைக்கக் கூடாது. கேலரி அல்லது ஸ்டேடியத்தில் இரவில் யாரும் தங்கக்கூடாது.
இவ்வாறு கடுமையான நிபந்தனைகளுடன் இந்த மாநாட்டை நடத்த தமிழக அரசுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.
இந் நிலையில் இன்று பிற்பகலில் தொடங்கும் இந்த மாநாட்டையொட்டி டான்ஸ் மாஸ்டர் கலா தலைமையில் விவசாயிகளைமகிழ்விக்க டான்ஸ் நிகழ்ச்சி நடக்கிறது. பரவை முனியம்மாவின் கிராமத்து பாடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவையொட்டி நேரு ஸ்டேடியம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு அரங்கின் உள்ளேயும்வெளியிலும் ஜெயலலிதாவுக்கு ராசியான கலரான பச்சை மயமாக காட்சியளிக்கிறது.