அதிமுகவிலிருந்து கராத்தே தியாகராஜன் நீக்கம்
சென்னை:
அதிமுகவிலிருந்து சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் இன்று நீக்கப்பட்டார்.
சென்னை மாநகராட்சி துணை மேயரான கராத்தே, காங்கிரஸ் கட்சியிலிருந்து மூப்பனாருடன் விலகி பின்னர் அதிலிருந்துஅதிமுகவுக்குத் தாவியவர். சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கட்சியில் அசுர வளர்ச்சி பெற்று துணை மேயரானார்.ஸ்டாலினுக்கு எதிரான துருப்புச் சீட்டாக கராத்தே பயன்படுத்தப்பட்டார்.
இந் நிலையில் அம்மா-சின்னம்மா இடையிலான பனிப்போர் காரணமாக கராத்தே மீது அதிமுக தலைமை கடும் நடவடிக்கைஎடுக்க திட்டமிட்டது. இதை தனது காண்ட்டாக்டுகள் மூலம் தெரிந்து கொண்ட கராத்தே திடீரென தலைமறைவானார்.
தனக்கு அரசியல் பாதுகாப்பு தேடும் முகமாக காங்கிரஸ் கட்சியில் சேர தீவிரமாக முயற்சித்து வருகிறார். இதற்கு முதலில் எதிர்ப்புத்தெரிவித்த மாநில காங்கிரஸ் தலைவர் வாசனும், திமுகவும் இப்போது அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளதாகத் தெரிகிறது.
தான் திமுகவுக்கு எதிரியல்ல என்பதை தனது ஆட்கள் மூலம் அக் கட்சியின் உயர் மட்டத்துக்கு கராத்தே எடுத்துச்சொன்னதாகவும், தனக்கு அபயம் அளிக்குமாறும் கராத்தே கெஞ்சியதாகத் தெரிகிறது. இதையடுத்து அவரை காங்கிரசில் சேர்க்கதங்களுக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை என திமுக கூறிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் அவர் காங்கிரசில் சேர இருந்தசிக்கல்கள் நீங்கிவிட்டன.
இந் நிலையில் கராத்தே தியாகராஜனை கட்சியிலிருந்து நீக்கி முல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக இன்றுஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென் சென்னை மாவட்டம் மயிலாப்பூரைச் சேர்ந்த கராத்தே தியாகராஜன், கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்குமுரணாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். கட்சிக்கு மாசு ஏற்படும் வகையிலும் அவர் நடந்து கொண்டார்.
கட்சிப் பெயருக்கு அவப் பெயர் ஏற்படும் வகையில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே கட்சியின் அடிப்படைஉறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
எனவே அவருடன் அஇஅதிமுகவினர் யாரும் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் காள்ளக் கூடாது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
இதற்கிடையே தன்னைக் கைது செய்தால் சில ரகசியகங்களை வெளியில் சொல்வேன் என கராத்தே தரப்பும் மிரட்டி வருவதாகத்தெரிகிறது. இதனால் தான் இதுநாள் வரை அவரை போலீசார் கைது செய்யாமல் இருப்பதாகவும் ஒரு தகவல் வலம் வருகிறது.
நீங்கள் ஆளும் தரப்பை மிரட்டி வருவதால் தான் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கராத்தேவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதற்கு கராத்தே பதிலளிக்கவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் முன் ஜாமீன் பெற்ற பிறகே தமிழகத்திற்கு திரும்பும் முடிவில் கராத்தே இருக்கிறார் என்கிறார்கள்.