நாளை வீரப்பன் நினைவு நாள்: உஷார் நிலையில் போலீஸ்
மேட்டூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி வீரப்பனின் சமாதி உள்பட மலை கிராமங்களில்போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக, கர்நாடக போலீஸாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த சந்தனக் கடத்தல்வீரப்பன் கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தர்மபுரி அருகே தமிழக அதிரடிப்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான்.அவனது உடல் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு கிராமத்தில் புதைக்கப்பட்டது. வீரப்பன் கொல்லப்பட்டு நாளையுடன் ஒருஆண்டு நிறைவடைகிறது. இதையடுத்து வீரப்பன் சமாதிக்கு அவனது ஆதரவாளர்கள் ஏராளமான பேர் வருவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தனது கணவன் சமாதிக்கு நாளை தனது மகள்கள் பிரபா, வித்யாராணி மற்றும் வீரப்பனின்தங்கை முனியம்மா ஆகியோருடன் வந்து அஞ்சலி செலுத்தவுள்ளார்.
மேலும் மலை கிராமப் பெண்களுக்காக ஒரு புதிய இயக்கம் ஒன்றையும் நாளை தொடங்கவுள்ளார்.
இந்த அமைப்பைத் தொடங்குவதற்கான அனுமதியை காவல்துறை கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இது தொடர்பாக விழாநடத்த இடம் கொடுக்கக் கூடாது என மேட்டூர், கொளத்தூர் பகுதிகளைச் சேர்ந்த திருமண மண்டப உரிமையாளர்களைகாவல்துறை மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது.
எனவே வீரப்பன் சமாதிக்கு அருகிலேயே தனது புதிய அமைப்பு தொடர்பான அறிவிப்பை முத்துலட்சுமி வெளியிடுவார் எனத்தெரிகிறது.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இந்த புதிய அமைப்பைத் தொடங்கி வைக்கிறார்.
இதற்காக வீரப்பன் சமாதி அருகே இடம் தயார் செய்யப்பட்டு அங்கு பந்தல் போடப்பட்டு வருகிறது. அன்னதானத்திற்கும்முத்துலட்சுமி ஏற்பாடு செய்துள்ளார்.
முத்துலட்சுமி புதிய அமைப்பு தொடங்குவதற்கு தடா தங்கவேல் என்பவர் தலைமையில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர். முத்துலட்சுமியைக் கண்டித்து கொளத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் அவர்கள்திட்டமிட்டுள்ளனர்.
இவர்கள் அதிமுக மற்றும் காவல்துறையின் தூண்டுதலால் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக முத்துலட்சுமி தரப்பு கூறுகிறது.
மொத்தத்தில் வீரப்பன் நினைவு தினத்தில் பரபரப்பு சம்பவங்கள் நடக்கலாம் என்பதால் போலீஸார் உஷார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்துவதற்கு போலீஸார் தடைவிதித்துள்ளனர்.
கல்யாண ஊர்வலம், சவ ஊர்வலம் ஆகியவற்றிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேட்டூர், கொளத்தூர், மூலக்காடு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிரடிப் படையினரும்அதிக அளவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலீஸ், அரசு நெருக்கடிகள் இருந்தாலும் திட்டமிட்டபடி புதிய அமைப்பைத் தொடங்கவுள்ளதாக முத்துலட்சுமி கூறியுள்ளார்.