மலேசியா: பரிதவிக்கும் 36 தமிழக இளைஞர்கள்
சென்னை:
மலேசிய சிறையில் வாடி வரும் தங்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 36 இளைஞர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளைஞர்கள் வேலைக்காக மலேசியா சென்றனர். அங்கு பொய்யான குற்றச்சாட்டின் பேரில் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.மலேசியாவின் காஜாங் ஜிமின் காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள், தங்களின் பரிதாப நிலையை எடுத்துக் கூறி ஜெயலலிதாவுக்கும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.
கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:
நாங்கள் தலா ரூ. 85,000 கமிஷனாக செலுத்தி ஒர்க் பர்மிட்டின் கீழ் மலேசியா வந்தோம். எங்களை கம்பெனி வேலைக்கு அனுப்புவதாக கூறி மலேசியாவுக்கு அழைத்து வந்த ஏஜென்டுகள், ஒப்பந்த அடிப்படையில் வேலையில் சேர்த்து விட்டு சென்று விட்டனர்.
இது எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்தாலம் குடும்ப வறுமையை மனதில் கொண்டு பொறுமையுடன் வேலை பார்த்து வந்தோம். ஆனால் வேலை பார்த்த இடத்தில் எங்களுக்கு தினசரி அடி உதைதான் கிடைக்கும். சரியாக சம்பளம் தரவில்லை, சாப்பாடும் சரியில்லை. பசியோடு எங்களால் வேலை பார்க்க முடியவில்லை.
வேறு வழியில்லாமல், நாங்கள் நாடு திரும்புகிறோம், எங்களது பாஸ்போர்ட்டைக் கொடுங்கள் என்று கேட்டோம். அதற்கு பாஸ்போர்ட்டை தர முடியாது என்று மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து இந்தியத் தூதரகத்தை அணுக முடிவு செய்தோம்.
ஆனால் அதை அறிந்து கொண்ட நிறுவனத்தார் எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி போலீஸில் பிடித்துக் கொடுத்து விட்டனர். ஆகஸ்ட் 29ம் தேதி முதல் நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம்.
மலேசிய ஏஜென்டுகளுக்கும், தமிழக ஏஜென்டுகளுக்கும் இடையே நிலவும் கமிஷன் தொகை தொடர்பான தகராறால்தான் நாங்கள் இவ்வாறு அவதிப்பட நேரிட்டுள்ளது.
கடந்த 4 மாதமாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவதிப்பட்டு வருகிறோம். ஒரு வாரத்திற்குள் எங்களை மீட்காவிட்டால் எங்களில் எத்தனை பேர் உயிரை இழப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
எனவே எங்களை மீட்டுச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.