புத்தக பையில் சாராயம் கடத்திய மாணவர்கள்!!
கடலூர்:
புத்தகப் பையிவ் சாராயம் கடத்திய 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் பகுதியில் கள்ளச் சாராய விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதை வடக்கு மண்டல ஐஜியான ஜாங்கிட் தனது தீவிரமான முயற்சிகளால் அவ்வப்போது ஒடுக்கி வந்தாலும் சாராய கும்பல்கள் மீண்டும் தலைதூக்கிய வண்ணம் உள்ளன.இந் நிலையில் சாராயக் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க விழுப்புரம் சரக டிஐஜி சஞ்சய் அரோராவுக்கு ஜாங்கிட் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து கடலூர் எஸ்பி பன்னீர்செல்வம் தலைமையிலான டீம் கள்ளச் சாராய கும்பல்களை ஒடுக்க ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டது.
அப்போது புதுவையில் இருந்து இந்தச் சாராயம் கடலூருக்குள் கடத்தி வரப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து வாகன சோதனைகளைத் தீவிரமாக்கி கள்ளச் சாராய கும்பல்களுக்கு செக் வைத்தனர் போலீசார்.
இந் நிலையில் தான் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தி சாராயம் கடத்தும் வேலையில் அந்தக் கும்பல்கள் இறங்கின. கடலூர்-பாண்டிச்சேரி எல்லையில் வண்டிக்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரிகள் பஸ்களில் எல்லை கடந்து பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் பைகளில் சாராய பாக்கெட்டுகளை வைத்து கடலூருக்கு அனுப்பி வந்துள்ளனர்.
சீருடையில் வந்த அந்த மாணவர்களை யாராலும் சந்தேகிக்க முடியவில்லை.
சாராயம் எப்படி வருகிறது என்று தெரியாமல் அல்லாடிய போலீசார் உளவுப் போலீசாரின் உதவியை நாடினர். உளவுப் படையினர் எல்லைப் பகுதியில் கண்காணித்தபோது தான் பஸ்களில் வரும் பள்ளி மாணவர்களின் பைகளில் சாராயம் கடத்தப்படுவது தெரியவந்தது.
அந்த மாணவர்களை இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான டீம் நேற்று மடக்கிப் பிடித்தது. கார்த்திக் (வயது 13), சிவமூர்த்தி (12), சதீஷ் (12), மணி (14), சின்னராஜ் (12) ஆகிய அந்த மாணவர்களின் புத்தகப் பைகளில் தலா 2 லிட்டராக மொத்தம் 10 லிட்டர் சாராயம் இருந்தது.
இவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் அழுதபடியே தந்த தகவல்களை வைத்து
கள்ளச் சாராய கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாணவர்கள் பிடிபட்ட விவரம் அறிந்து அக் கும்பல் தலைமறைவாகிவிட்டது.