விஸ்வரூபமெடுக்கும் நில மோசடி:ரூ. 100 கோடி ஸ்வாகா- விசாரணைக்கு ஜெ. உத்தரவு
சென்னை:
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த நிலமோசடிகள் குறித்து தீவிரமாக விசாரிக்கமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அருகே கொளத்தூரில் அரசு ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியும், மற்றவர்களுக்குத் திருட்டுப்பட்டா மூலம் விற்பனையும் செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.இவர்களிடம் நடத்தியபோது முன்னாள் துணை கலெக்டர் ஒருவரும் மேலும் 5 வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இந்த நிலமோசடியில் தொடர்பு இருப்பது உறுதியானது.
மேலும் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு இந்த நில மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த மோசடியில் கைதாகியுள்ள துணை கலெக்டர் சண்முகம், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும்சென்னையில் பணியாற்றியுள்ளார்.
எனவே அந்த மாவட்டங்களிலும் அவர் நில மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என அரசு சந்தேகிக்கிறது. இதற்கிடையே சண்முகம்மீது ஏற்கனவே 35க்கும் மேற்பட்ட புகார்கள் இருப்பதாகவும் அரசின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றியபோது பிற அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து ரூ. 100 கோடிக்கும் அதிகமானஅளவுக்கு அரசு நிலத்தை பட்டா போட்டு தனியாருக்கு விற்றிருப்பதாகவும் தெரிகிறது.
எனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கண்ட ஐந்து மாவட்டங்களிலும் நடந்த நிலமோசடிகள் குறித்து மிகவும் விரிவானவிசாரணை நடத்துமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் மேலும் பல அதிகாரிகள் போலீஸ் வலையில் சிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில், தமிழகம் முழுவதும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து ஏரி, குள ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அகற்றி வருகிறது. இந்த வேலையில் அரசு இறங்கியபோது தான்ஏரிகளையே அதிகாரிகள் பட்டா போட்டு தனியாருக்கு விற்றிருப்பது தெரிய வந்தது.