தமிழகம்-பெங்களூர் இடையே பஸ், ரயில் ரத்து
சென்னை:
கன மழை ஒசூர்-பெங்களூர் நெடுஞ்சாலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பெங்களூர் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள்ஒசூருடன் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் தமிழகம்- கர்நாடகம் இடையிலான ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், பல ரயில்கள் வேறு மார்க்கத்தில் சுற்றிவிடப்பட்டுள்ளதாலும் தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கும், பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கும் செல்வோர் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கடும் வெள்ளம் காரணமாக கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது. சுமார் 50 அடி அளவுக்கு சாலையைவெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. வெள்ளம் போன பாதையில் சாலையில் 30க்கு பெரிய பள்ளம் உருவாகியது.
இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து துரிதகதியில் சீரமைப்புப் பணிகள் நடந்து அந்தப் பாதை சரிசெய்யப்பட்டு வாகனப் போக்குவரத்து இப்போது தடங்கலில்லாமல் நடந்து வருகிறது.
இருப்பினும் ஓசூர்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வெள்ளம் பாய்ந்து வருகிறது. இந்த நெடுஞ்சாலையின்இரு புறங்களிலும் உள்ள ஏரிகள், கண்மாய்கள் உடைந்து நீர் சாலையில் பாய்ந்து வருகிறது.
இதனால் பெங்களூர் வரை செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூருடன் நிறுத்தப்பட்டு வருகின்றன.
ரயில்களும் தொடர்ந்து ரத்து:
அதே போல கர்நாடக மாநிலம் கோலார் அருகே வரதாபூர் என்ற இடத்தில் தண்டவாளத்தின் கீழ் இருந்த பாலத்தை வெள்ளம்அடித்துச் சென்றுவிட்டது. இங்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன் நள்ளிரவில் வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மாட்டிக்கொண்டது.
இதில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த இடத்தில் கன மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகள் நடக்கவில்லை. இதனால்கடந்த மூன்று நாட்களாக அந்த ரயில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டுள்ளது.
இதனால் சென்னை-பெங்களூர் இடையிலான பல ரயில்கள் இன்றும் மூன்றாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பலரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
பெங்களூர்-சென்னை சதாப்தி, லால்பாக் எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இன்றும் (புதன்கிழமை) ரத்துசெய்யப்பட்டுள்ளன.