மீண்டும் புயல் சின்னம்: சென்னையில் விடிய விடிய கன மழை
சென்னை:
சென்னை நகரை சமீபத்தில் பயமுறுத்திய புயல் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் மீள்வதற்குள் நேற்று இரவு முதல் நகரில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகள் மீண்டும் வெள்ளக் காடாக மாற்றியுள்ளன.
வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி வருவதால் இந்த மழை பெய்து வருகிறது.கடந்த வாரம் முழுவதும் சென்னை நகரில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்து நகரையே வெள்ளக்காடாக மாற்றியது. புயல்சின்னம் காரணமாக பெய்த இந்த பலத்த மழையால் சென்னை நகரமே ஸ்தம்பித்தது.
அந்தப் பாதிப்பிலிருந்து நகர் இன்னும் கூட மீளவில்லை. இன்னும் வெள்ள நீர் தேங்கிக் கிடக்கிறது. இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவுமீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.
விடிய விடிய பெய்த இந்த கன மழையால் சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளப் பெருக்கெடுத்தோடியது. பல இடங்களில்வீடுகளுக்குள் மீண்டும் வெள்ளம் புகுந்தது. அண்ணா நகர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் நீர் அதிக அளவில்தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னைப் புறநகர்ப் பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்தது. வங்கக் கடலில் மீண்டும் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை புயல்சின்னமாக மாற வாய்ப்புள்ளதால் இந்த மழை நீடிக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த மழை காரணமாக தீபாவளி வழக்கமான பொழிவை இழந்தது. வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வர்த்தகர்கள் பெரும் கவலையில்மூழ்கியுள்ளனர். வெள்ளம் காரணமாக பல இடங்களில் பட்டாசுக் கடைகள் மூடப்பட்டுள்ளன.