தொடரும் மழை: ஒரே நாளில் 8 பேர் பலி
சென்னை:
தமிழகம் முழுவதும் பெய்து வரும் கன மழைக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 8 பேர் பலியானார்கள்.
பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து வட கிழக்குப் பருவ மழை வலுவடைந்துள்ளது.சென்னை நகரில் நேற்று காலை முதல் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நகரின்பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.
சென்னை நகரில் இந்த ஆண்டு வழக்கமான அளவை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. சென்னை மற்றும்புறநகர்ப் பகுதிகளில் இதுவரை பெய்துள்ள மழை அளவானது, கடந்த ஆண்டு பெய்த மழையை விடகூடுதலாகும்.
இன்னும் மழைக்காலம் முடிவடையாததால், சென்னைக்கு இந்த ஆண்டு அதிக அளவில் மழைப் பொழிவுகிடைக்கும் எனத் தெரிகிறது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை அப்படியே நிலை கொண்டிருப்பதால் இன்றும் தமிழகத்தின் பெரும்பாலானபகுதிகளில் பரவலாக கன மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இதே போல, ஈரோடுமாவட்டம் குமாரபாளையம், பவானி, சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்துள்ளது.
இப்பகுதிகளில் ஏற்கனவே காவிரி வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் குறையாத நிலையில்தொடர்ந்து மழை பெய்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்குநீர்வரத்து அபரிமிதமாகஉள்ளது.
நாகை மாவட்டத்திலும் பல பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்துமழை பெய்து வருவதால், பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
நாகை துறைமுகத்தில் 3வது எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்திலும் 3வது எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தொடர் மழைக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 8 பேர் பலியாயினர். கடலூர் பெண்ணையாற்றைக் கடக்கமுயன்ற ஆட்டோ டிரைவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
சாத்தனூர் அணை நிரம்பி வழிவதால் உபரி நீர் திறந்து விடப்பட்டள்ளது. இதனால் பெண்ணையாற்றில் நீர்கரைபுரண்டோடுகிறது.
இதில் வில்வநகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் குமார் என்பவர் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 பேர் பலியாயினர். நாகை மாவட்டம் அருள்தவம்புலம் பட்டிகிராமத்தில், சக்திவேல் என்பவர் மின்சாரக் கம்பியை மிதித்ததில் உயிரிழந்தார்.
அதே போல கள்ளிமேடு கிராமத்தில் அஞ்சம்மாள் என்பவர் தலை மீது இடி விழுந்து பலியானார்.
மேலும் 2 பேர் இடி தாக்கி காயமடைந்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செட்டிக்குட்டை வட்டம்கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்ற பெண் இடி தாக்கி இறந்தார்.
மேலும் 3 பேர் இடி தாக்கி காயமடைந்தனர். இதற்கிடையே, ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைவேகமாகநிரம்பி வருவதால், பவானி சாகர் கரையோரக் கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 102.50 அடியாகும். அணையில் தற்போது 102.35 அடி நீர் தேங்கியுள்ளது.
எனவே அணை திறக்கப்படவுள்ளதால், வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இதைத் தொடர்ந்து பவானி ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தமுக்குஅடித்து மக்களை உஷார்படுத்தி வருகிறார்கள்.