ஜெவுடன் ஜெகதீஷ் டைட்லர் திடீர் சந்திப்பு
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெகதீஷ் டைட்லர் முதல்வர் ஜெயலலிதாவைதிடீரென சந்தித்து பேசினார்.
ராஜிவ் குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர் டைட்லர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி பதவியேற்றபோது வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் துறைக்கான இணை அமைச்சராக டைட்லர் பதவியேற்றார். ஆனால், 1984ம் ஆண்டுசீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் டைட்லருக்கும் தொடர்பிருப்பதாக நானாவதி கமிஷன் குற்றம்சாட்டியதையடுத்து அவர் பதவி விலகினார்.இந் நிலையில் சென்னை வந்த ஜெகதீஷ் டைட்லர் திடீரென முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில்சந்தித்துப் பேசினார். நானாவதி அறிக்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தனக்கு உதவவில்லை என்றஅதிருப்தியில் டைட்லர் உள்ளார்.
தன்னை பதவி விலக வைத்து தனது அரசியல் எதிர்காலத்தை கட்சி முடக்கிவிட்டதாக அவர் கருதுகிறார்.
இந் நிலையில் பாஜக ஆட்சியின்போது அத்வானியின் பூரண ஆசியோடு சோனியாவை மிகக் கடுமையாகவிமர்சித்த ஜெயலலிதாவை டைட்லர் திடீரென சந்தித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
டைட்லரின் சென்னை வருகை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனுக்குக் கூடதெரிவிக்கப்படவில்லை.
தனிப்பட்ட முறையில் அவர் ஜெயலலிதாவை சந்தித்ததாகவும், இது குறித்து கட்சி மேலிடத்தில் புகார் செய்யப்படும்என்றும் தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர்.