250 குடும்பங்களுக்கு திமுக உதவி
சென்னை:
சென்னை அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு திமுக சார்பில் உதவிகள் அளிக்கப்பட்டன.
சென்னை அருகே சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள பரமேஸ்வரன் நகர் அருகே உள்ள ஏரி கடந்த சில ஆண்டுகளாக வறண்டுபோய்க் கிடந்தது. தண்ணீர் வருமா என்ற சந்தேகத்தில் மக்கள் இருந்த நிலையில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாகஇந்த ஏரி நிறைந்து, உடைந்தும் போய் விட்டது.இதன் காரணமாக பரமேஸ்வரன் நகர் பகுதியில் உள்ள 250க்கும் மேற்பட்ட குடிசைகள் தண்ணீரில் மூழ்கி விட்டன. இதில்பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களையும் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோரை திமுக பகுதிச் செயலாளர் உமாபதி தலைமையில்திமுகவினர் மீட்டு அரசு மேல் நிலைப் பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.
அவர்களுக்கு திமுக சார்பில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. தாம்பரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம்பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
அனைத்து கட்சி குழு-திமுக கோரிக்கை:
இதற்கிடையே மழை, வெள்ள பாதிப்புப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைக்க வேண்டும் என திமுககோரியுள்ளது.
சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுகுறித்து பின்னர்செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
கடந்த இரண்டு வாரங்களாக தமிழகம் முழுவதும் பெய்து வரும் கன மழையால் ஏரிகள், குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. பல பகுதிகள் நீரில் மிதக்கின்றன.விவசாயிகளும், பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் சரிவர சென்றடையவில்லை. இவற்றை முறையாக செய்திடவும், உண்மையாகபாதிக்கப்பட்டவர்களுக்கு பாரபட்சமின்றி உதவவும் மாவட்டங்கள்தோறும் அனைத்தக் கட்சிக் குழுக்களை அரசு உடனடியாக அமைத்திட வேண்டும்.
சென்னையில் நிவாரணப் பொருட்கள் வாங்க ஏற்பட்ட நெரிசலில் 6 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை.ஆனால் இதுபோன்ற பெரிய கூட்டங்களின்போது போலீஸார் உரிய முறையில் செயல்பட்டு, கூட்டத்தைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் அதில் காவல்துறையினர் மெத்தனமாக இருந்து விட்டனர். திமுக ஆட்சிக் காலத்திலும் இதுபோல நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.திட்டமிட்டு பகுதி வாரியாக நிவாரணப் பணிகளைப் பிரித்து அமைதியான முறையில் கொடுத்துள்ளோம்.
அப்படிப்பட்ட முறையை இப்போதும் கடைப்பிடித்திருந்தால் இதுபோல அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது.
சட்டசபைத் தேர்தல் குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் விவாதித்துள்ளோம். கூட்டணியில் புதிய கட்சிகள் சேருவது குறித்து தேர்தல் நெருங்கும்போதுபேசுவோம். விடுதலைச் சிறுத்தைகள் எங்களுடன் சேருவது குறித்து இதுவரை விவாதிக்கவில்லை என்றார் கருணாநிதி.