வெள்ளத்தில் தடுமாறும் நாகை: மூழ்கிய பயிர்கள்
நாகை:
நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அந்த மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
கடந்த 6 நாட்களாக நல்ல மழை பெய்து வருவதை தொடர்ந்து வேதநாயகம், செட்டித்தெரு, ஆரிய நாட்டுத் தெரு,கூக்ஸ் சாலை, மறைமலைநகர், பாரதி மாக்கெட் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது.மேலும் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 54 இடங்களில் தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டு அவர்களை தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த மழையால் வடகுடி, தேத்தி, மேலவாஞ்சூர் உள்பட சில பகுதிகளில் அமைக்கப்பட்டதற்காலிக குடியிருப்புகள் பாதிப்பு அடைந்துள்ளது.
நாகையில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருப்பதால் நாகை மாவட்டத்தில் உள்ள 10,000 மீனவர்கள் கடலுக்குள்மீன் பிடிக்க செல்லவில்லை.
இதே போல் நாகை மாவட்டம் திருப்பூண்டி, தலை ஞாயிறு பகுதிகளில் 1500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பாபயிர்கள் நீரில் மூழ்கி கிடக்கின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 50,000 பேர் திருமண மண்டபம், பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாகை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும்இன்றும்(செவ்வாய் கிழமை), நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் வி.சண்முகம்தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் சுமார் 50,000 ஹெக்டேர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நாகை மாவட்ட கலெக்டர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சில நாட்களாக வெள்ளப் பகுதிகளிலேயே முகாமிட்டு மீட்புப்பணிகளை நேரில் கண்காணித்து வருகிறார்.
நீரில் மூழ்கிய தண்டவாளம்:
நாகப்பட்டிணம்-நாகூர் இடையிலான ரயில் பாதையில் தண்டவாளம் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் பல இடங்களில்தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டதால் இப் பகுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.