நட்வர் சிங்கிடமிருந்து வெளியுறவு துறை பறிப்பு
டெல்லி:
இராக்கின் எண்ணெக்கு உணவு திட்டத்தில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் நட்வர் சிங்கிடம் இருந்து வெளியுறவுத்துறைபறிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சதாம் ஹீசேன் ஆட்சியில் இருந்தபோது அந் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஆயினும் உணவு, மருந்துபோன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்கமதி செய்யும் வகையில் ஐநா மூலமாக பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஏற்றுமதிசெய்ய இராக்குக்கு அனுமதி தரப்பட்டது.இந்த ஏற்றுமதி, இறக்குமதி உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் மூலம் நடந்தது. ஆனால், இதன்மூலம் வந்த பணத்தைஉணவுக்குச் செலவிடாமல் தனது ஆடம்பர செலவுகளுக்கும் ஆயுதங்கள் வாங்கவும் சதாம் செலவிட்டதாகப் புகார் கூறப்பட்டது.
மேலும் இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், ஐநா அனுமதித்த அளவுக்கும் அதிகமாக எண்ணெய்முறைகேடாக விற்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது குறித்து ஐ.நா. மூத்த அதிகாரியான வோல்க்கர் தலைமையில் ஒரு குழுவிசாரணை நடத்தியது.
அதில், இந்த முறைகேட்டில் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்குத் தொடர்பு உள்ளதாகவும், அதில் ஒரு நிறுவனத்தில் நட்வர்சிங்கின் மகன் பார்ட்னராக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நட்வர் சிங்கின் மகனுக்கு மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கும் இந்த முறைகேட்டின் மூலம் வந்த தொகை போய்ச்சேர்ந்ததாகவும் வோல்க்கர் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து நட்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க் கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. இதைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணை முடிவடையும் வரை நட்வரை வெளியுறவுத்துறையில் இருந்து விலக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.விசாரணையின் முடிவைப் பொறுத்து அவருக்கு மீண்டும் இலாகா தரப்படும் அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்றுதெரிகிறது.
அதுவரை வெளியுறவுத்துறையை பிரதமர் மன்மோகன் சிங்கே கவனிப்பார் என்று தெரிகிறது. விசாரணை முடியும் வரை இலாகாஇல்லாத கேபினட் அமைச்சராக நட்வர் சிங் நீடிப்பார்.