வெள்ள நிவாரணம் வழங்குவதில் பெரும் குளறுபடி: மக்கள் கொதிப்பு- போராட்டம் வெடிப்பு
சென்னை:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பெரும் குளறுபடிகள் நடப்பதால் மக்கள்ஆங்காங்கே சாலை மறியல், முற்றுகை ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தக் குளறுபடிகளுக்கு அந்தந்தப் பகுதி அதிகாரிகளும் ஆளும் கட்சியினருமே காரணமாக விளங்குகின்றனர்.பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்குவதை விட்டுவிட்டு டோக்கன் கொடுப்பது, ரேசன் கார்டுகளை காட்டச்சொல்வது என பல குழப்பங்களை செய்து வருகின்றனர். நீரில் ரேசன் கார்டுகள் உள்பட உடமைகள் அனைத்தும் அடித்துச்செல்லப்பட்ட மக்களுக்கு இதனால் நிவாரணம் கிடைக்கவில்லை.
அதே போல டோக்கன் கொடுக்கிறோம் என்ற பெயரில் அதிமுகவினர் புகுந்து குழப்பம் செய்து வருகின்றனர். இந்த டோக்கனைக்காட்டினால் தான் நிவாரண உதவியும் நிதியுதவியும் வழங்கப்படும் என்ற நிலையில் 100 பேர் பாதிக்கப்பட்ட இடத்தில் வெறும் 10பேருக்கு மட்டும் டோக்கன் தருவது மிச்சத்தை அமுக்கிவிடுவது போன்ற செயல்களில் ஆளும் கட்சியினரும் அதிகாரிகளும்ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆங்காங்கே மக்கள் கொதித்துப் போய் போராட்டங்களில் குதித்து வருகின்றனர்.
தேர்தல் வரவுள்ள நிலையில் மக்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதிக்க விரும்பாத அரசு நிவாரணம் பெற ரேசன் கார்டுகளைக்காட்ட வேண்டாம் என்று இப்போது அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் நிவாரண உதவிகள் வழங்குவதில் மாநிலம் முழுவதுமேபெரும் அளவில் குழப்பமும், லோக்கல் அரசியல் தலையீடும் இருந்து வருகிறது.
சென்னை கலெக்டர் கோரிக்கை:
இந் நிலையில் சென்னை நகரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுவருகிறது. எனவே பொதுமக்கள் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்டஆட்சித் தலைவர் சந்திரமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டஅனைத்துக் குடும்பங்களுக்கும், ஒரு வீடு கூட விடாமல் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகைவழங்கப்பட்டு வருகிறது.
நிவாரணம் பெறத் தகுதி வாய்ந்த அனைவருக்கும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள், தாலுகா அலுவலகங்களில்நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நேரத்தில் அனைவருக்கும் தேவையானது பொறுமை மட்டுமே. பொறுமையுடன் இருந்து நவாரணஉதவிகளைப் பெறுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தங்களது பகுதியில் நிவாரண உதவிகள் கிடைக்கும் வரை காத்திருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.பொறுமையிழந்து ரேஷன் கடைகள், தாலுகா அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம், சாலை மறியல்போன்றவற்றை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி, மாம்பலம்-கிண்டி, எழும்பூர்-நுங்கம்பாக்கம் ஆகிய தாலுகாக்களுக்கான வெள்ளநிவாரண டோக்கன் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார் சந்திரமோகன்.