கராத்தே தியாகுவின் ஏட்டிக்கு போட்டி
சென்னை:
மாநகராட்சி கூட்டம் நானில்லாமல் கூட்ட முடியாது என்று துணை மேயர் கராத்தே தியாகராஜன் மலேசியாவில் இருந்து சவால்விட்டிருக்கிறார்.
சென்னை மாநகராட்சி கூட்டம் வரும் 21ம் தேதி நடக்கும் என கமிஷனர் விஜய்குமார் அறிவித்துள்ள நிலையில், வரும் 28ம் தேதிதான் கூட்டம் நடக்கும் என கராத்தே அறிவித்துள்ளார்.தலைமறைவாக உள்ள கராத்தே கூட்டத்தை நடத்த அறிவிப்பு வெளியிட முடியுமா என்ற பரபரப்பும், மாநகராட்சிக் கூட்டத்தைக்கூட்டும் அறிப்பை வெளியிட கமிஷ்னருக்கு அதிகாரம் உள்ளதா என்ற சட்ட சர்ச்சையும் எழுந்துள்ளது.
இந் நிலையில் நிருபர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேட்டி அளித்துள்ளார் தியாகராஜன். அவர்கூறியிருப்பதாவது:
கேள்வி: எந்த ஊரில் இருந்து பேசுகிறீர்கள்?
ப: டெல்லி
கே: நீங்கள் நேபாளத்தில் இருப்பதாகத் தகவல் வெளியானதே?
ப: அந்த சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை
கே: எப்போது சென்னை திரும்புவீர்கள்?
ப: விரைவில் வருவேன்.
கே: மாநகராட்சி கூட்டத்தை 21ம் தேதி கூட்ட கமிஷனர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறாரே?
ப: மாநகராட்சி மன்ற விதிப்படி மேயர்தான் கூட்டத்தை கூட்ட வேண்டும். அந்தப்பதவி காலியாக இருந்தால் கூட்டத்தை கூட்டதுணை மேயருக்கு அதிகாரம் உண்டு. துணை மேயர் பதவியும் காலியாக இருந்தால் அந்தச் சூழ்நிலையில் கமிஷனர் தன் பணியைசெய்ய வேண்டும். துணை மேயர் பதவியில் நான் இருக்கிறேன். அப்படி இருக்கும் போது கமிஷனர் வெளியிட்ட அறிவிப்புசட்டப்படி செல்லாது.
அவர் சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் தவறு செய்து சிக்கிக் கொண்டிருக்கிறார்.
கே: இனிமேல் என்ன செய்ய போகிறீர்கள்?
ப: மாநகராட்சி மன்றக் கூட்டத்தை வரும் 28ம் தேதி கூட்டப் போகிறேன். அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்.இது தொடர்பாக கமிஷனருக்கு விரிவான கடிதம் அனுப்பியுள்ளேன். அதில், ஜனநாயகரீதியில் தேர்வு செய்யப்பட்ட எனதுகடமையில் தலையிட்டுள்ளீர்கள். அது சட்டப்படி தவறு என்று கூறியுள்ளேன்.
கே: 28ம் தேதி கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்வீர்களா?
ப: என் அறிவிப்பின்படி 28ம் தேதி கூட்டத்தை கமிஷனர் கூட்டுவார்.
கே: உங்கள் அறிவிப்பை கமிஷனர் நிராகரித்துவிட்டால்?
ப: அவர் நிராகரிக்கட்டும். என்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை பாருங்கள்.
கே: கமிஷனர் கூட்டும் கூட்டத்தை சட்ட ரீதியாக சந்திப்பீர்களா?
ப: கமிஷனர் அறிவித்துள்ள கூட்டம் சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றத்தில் உத்தரவு பெறுவது எளிது. இதனால் 21ம் தேதிஅவர் கூட்டியுள்ள மாநகராட்சிக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நான் சொன்னபடி 28ம் தேதி நடத்த வேண்டும்.
இவ்வாறு கராத்தே பேட்டியளித்துள்ளார். இந் நிலையில் அவர் டெல்லியில் இருந்து பேசுவதாகக் கூறினாலும் அவரது செல்போன்அழைப்பு மலேசியாவில் இருந்து வந்துள்ளது. இதனால் இப்போது அவர் மலேசியாவில் இருப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications