ஜனாதிபதி மாளிகையை தாக்க சதி: பெங்களூர் விமானங்களுக்கு குண்டு மிரட்டல்
டெல்லி:
நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, டெல்லி மெட்ரோ ரெயில் உள்பட ஏழு இடங்களை தகர்க்க தீவிரவாதிகள் தீட்டிய சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.
டெல்லியில் கடந்த மாதம் 29ம் தேதி 3 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தது. 65 பேர் பலியாயினர். இது தொடர்பாகலஷ்கர்-இ-தொய்பா உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.காஷ்மீரில் சமீபத்தில் தாரிக் அகமது தார் என்ற தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில்,அடுத்த கட்டமாக நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, டெல்லி மெட்ரோ ரெயில், மத்திய அரசு அலுவலகங்கள்உள்பட ஏழு முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் போட்டுள்ள விவரம் தெரிந்தது.
டெல்லியில் ஏழு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தோம். டெல்லியில் குண்டு வெடிப்பு,நடத்திய நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் இந்தியாவை விட்டு போகவில்லை.
அவர்கள் இங்கேயே பதுங்கியுள்ளனர். அவர்கள் தான் இந்த தாக்குதலை நடத்தவுள்ளனர் என்று தாரிக் கூறியுள்ளான்.
இதை தொடர்ந்து டெல்லியில் அனைத்து முக்கிய இடங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பதுங்கியுள்ள தீவிரவாதிகள் பற்றிய தகவல்களை திரட்டுவதற்காக தாரிக் காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்படஉள்ளான்.
பெங்களூர் விமானத்துக்கு குண்டு மிரட்டல்:
இந் நிலையில் டெல்லியில் இருந்து பெங்களூர் செல்லும் விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டலையடுத்துபெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றிரவு டெல்லி விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு தொலைபேசியகத்தில் இருந்து இந்த மிரட்டல் வந்தது. இதையடுத்துபெங்களூர் கிளம்பவிருந்த இந்தியன் ஏர்லைன், சகாரா, ஜெட் ஏர்வேஸ், ஏர் டெக்கன் ஆகிய நிறுவனங்களின் விமானங்கள்நிறுத்தப்பட்டன.
அதில் இருந்த பயணிகள், அவர்களது உடமைகள் மீண்டும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. மோப்ப நாய்கள்,வெடிகுண்டு நிபுணர்கள் படை இந்த விமானங்களை சோதனையிட்டன. ஆனால், குண்டு ஏதும் சிக்கவில்லை.
இதனால் இந்த 4 விமானங்களும் பல மணி நேரம் தாமதமாக பெங்களூர் புறப்பட்டுச் சென்றன.