அய்யரை தாக்க முயன்ற அதிமுகவினர்
சீர்காழி:
மயிலாடுதுறை அருகே அமைச்சர் மணிசங்கர் அய்யரின் காரை அதிமுக எம்எல்ஏவும் அதிமுகவினரும் வழி மறித்து பெரும்கலாட்டா செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே, 2003ம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதாவால் மேடையில் வைத்து மிரட்டப்பட்டவர் மணி. அவரை அதிமுகவின்அடிதடி பிரமுகரான ஓ.எஸ்.மணியன் தனது ஆட்களை வைத்து விரட்டி, விரட்டி அடித்தார்.இதனால் மயிலாடுதுறையில் மிகுந்த பாதுகாப்புடன் தான் மணிசங்கர் வலம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந் நிலையில் அந்தத் தொகுதியில் மீண்டும் வென்று மத்திய அமைச்சராகிவிட்டார் அய்யர். அவருக்கு மத்திய கமாண்டோபாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் வரும்போது மாநில போலீசாரும் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
நேற்று அவர் தனது மயிலாடுதுறைத் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். நாகை மாவட்டத்தில் வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய அவர் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
அப்போது அவரிடம் தங்களுக்கு மாநில அரசு உரிய நிவாரணம் அளிக்கவில்லை என பொது மக்கள் பலரும் புகார் கூறினர்.முதலைமேடு என்ற இடத்தில் தமிழக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்ததைக் கண்ட மணி சங்கர் அய்யர்,ஜெயலலிதாவையும் தமிழக அரசையும் கண்டித்துப்பேசினார்.
இதைத் தொடர்ந்து மயிலாடுதுறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் அய்யர். அவரது கார் வரிசை சீர்காழி அருகே வந்தபோதுஅதை சீர்காழி அதிமுக எம்.எல்.ஏ சந்திரமோகன் தலைமையிலான அதிமுகவினர் வழி மறித்தனர்.
எங்கள் தலைவி ஜெயலலிதாவையும் அவரது அரசையும் நீ எப்படி குறை கூறலாம் என்று கூறியபடி மணிசங்கரின் காரைஅதிமுகவினர் தாக்க முயன்றனர். அதை அய்யருடன் வந்த காங்கிரஸ் கட்சியினர் தடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையேஅடிதடி ஏற்படும் சூழல் உருவானதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுகவினர் கூற, முதலில் மக்களிடம் ஜெயலலிதா மன்னிப்பு கேட்கட்டும்என காங்கிரஸ் கட்சியினர் கூறினர்.
இரு தரப்பினருக்கும் இடையே சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குவாதம் நடந்தது. அதுவரை காரிலேயே பாதுகாப்பாகஅமர்ந்திருந்தார் மணிசங்கர் அய்யர்.
தமிழகத்தில் இருக்கும்போது தனக்கு மாநில போலீசார் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதால், தனது மத்திய பாதுகாப்புப்படையினரை அவர் உடன் அழைத்து வரவில்லை.
ஆனால், சீர்காழி அதிமுக எம்எல்ஏவால் வழி மறிக்கப்பட்ட அய்யரைக் காக்க அங்கு போலீசாரே இல்லை. காங்கிரசார்காவல்துறையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த பிறகு, சினிமாவில் எல்லாம் முடிந்த பின் கிளைமாக்சில் வரும் போலீஸ்மாதிரி, ஒன்றரை மணி நேரம் கழித்து போலீஸ் படையும் வருவாய்த்துறையினரும் ஆற, அமர வந்து சேர்ந்தனர்.
அவர்கள் அதிமுகவினரை கலைந்து போகச் செய்யாமல் அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடைசியில்பெரிய மனது காட்டி அதிமுகவினர் கலைந்து போனதையடுத்து வேட்டி கிழியாமல் பத்திரமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றார்மணிசங்கர் அய்யர்.












Click it and Unblock the Notifications