குஷ்புவின் மேட்டூர் பயம்
சென்னை:
மேட்டூருக்குச் செல்லவே தனக்கு அச்சமாக உள்ளதால் மீண்டும் அந்த கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று கோரி செக்ஸ் பேச்சு புகழ் நடிகை குஷ்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேட்டூர் இரண்டாவது நீதிமன்றத்தில் பாமக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தகுஷ்பு, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைதாகும் சூழல் ஏற்பட்ட பின்னரே சரணடைந்தார்.
அப்போது அவர் மீது செருப்புகள், அழுகிய முட்டைகள், நாறிய தக்காளிகள் ஆகியவை வீசப்பட்டன. ஒரு வழியாக ஜாமீன்வாங்கிக் கொண்டு தப்பி வந்தார் குஷ்பு.
அந்த வழக்கில் மீண்டும் அடுத்த மாதம் 16ம் தேதி குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இந் நிலையில் சென்னைஉயர் நீதிமன்றத்தில் குஷ்பு இன்று ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,
மேட்டூர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும். அந்த வழக்கையே ரத்து செய்ய வேண்டும்.வரும் 16ம் தேதி மீண்டும் அங்கு ஆஜராக வேண்டும் என்ற நீதிபதியின் தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும்.
நான் மேட்டூர் சென்றபோது பெண்கள் செருப்பு, துடைப்பத்துடன் போராட்டம் நடத்தினர். இந் நிலையில் நான் மீண்டும் அங்குபோனால் எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம்.
மேலும் எனது பேச்சால் பொது அமைதிக்கு பங்கம் வந்துள்ளதாகக் கூறித்தான் பாமக வழக்கறிஞர் முருகன் வழக்குத்தொடர்ந்துள்ளார். இது போன்ற வழக்குத் தொடரும்போது தமிழக அரசின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதைப்பெறவில்லை.
இதனால் அந்த வழக்கை மேட்டூர் நீதிமன்றம் விசாரித்து சம்மன் அனுப்பி பின்னர் வாரண்ட் பிறப்பித்ததும் தவறு. ஆகையால்வழக்கையே ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி மாசிலாமணி முன் விசாரணைக்கு வருகிறது.