பல்லடம் அருகே வேன் லாரி மோதல்: 5 பெண்கள் பலி
பல்லடம்:
பல்லடம் அருகே வேன் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பெண்கள் பலியானார்கள்.
பல்லடம் லட்சுமி மில் நேரு நகல் அரிஜன காலனியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி வள்ளி.வெள்ளியங்கிரி குடும்பத்தினர் தனது 5 மாத ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்காக கொடுமுடி கோவிலுக்கு செல்லவிரும்பினார். எனவே அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார்.
இதையடுத்து இன்று காலை லட்சுமி மில்லிலிருந்து டெம்போ வேனை வாடகைக்கு அமர்த்தி கொடுமுடிக்கு புறப்பட்டனர்.
பல்லடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாதப்பூர் என்ற இடத்தருகே சென்றபோது காலை 7 மணி அளவில்கரூரில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த மணல் லாரி வேன் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாகஇறந்தனர். பலியான பெண்களின் பெயர் விவரம் வருமாறு: நாச்சம்மாள் (வயது 48), பொன்னம்மாள் (வயது 45), பழனாள்(வயது 60), பொன்னி (வயது 40), மகாளி (வயது 60).
மேலும் காயமடைந்த 8 பேரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவயிடத்தை பல்லடம் போலீஸ்டிஎஸ்பி சண்முகம், இன்ஸ்பெக்டர் லோகநாதன், சப்இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டு விபத்தினால் ஸ்தம்பித்தபோக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.
மணல் லாரி ஓட்டுநர் ஜான் போலீசில் சரணடைந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.