கார்த்திக் விழாவுக்கு தமிழக அரசு தடை
தேனி:
தேனியில் நடிகர் கார்த்திக் நடத்த இருந்த நலத்திட்ட உதவி வழங்கும் கூட்டத்துக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
முக்குலத்தோர் சமூக மக்களின் வாக்குகளைக் குறி வைத்து மறைமுக அரசியல் நடத்தி வருகிறார் கார்த்திக். விரைவில் கட்சியும் தொடங்கவுள்ளார். அவரது கூட்டங்களுக்கு பெரும் அளவில் முக்குலத்தோர் சமுதாய மக்கள் திரள்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் அவருக்கு ஆதரவு தந்து வருகின்றனர்.
ஜனவரியில் நெல்லையில் மாநாடு நடத்தி தனது சரணாலயம் அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றவும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
முக்குலத்தோர் சமூக வாக்குகளையே பெருவாரியாக நம்பியுள்ள அதிமுகவின் ஓட்டு வங்கியின் கார்த்திக் பெரிய ஓட்டையை ஏற்படுத்துவார் என்ற அச்சம் அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கார்த்திக்குக்கு பல வகைகளிலும் நெருக்கடி தரப்பட்டு வருகிறது.இந் நிலையில் தனது சரணாலயம் அமைப்பின் சார்பில் தேனியில் வரும் 27ம் தேதி தென் மாவட்ட அளவில் நலத்திட்ட உதவி வழங்க கார்த்திக் திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்த விழாவுக்கு அனுமதி வழங்க தேனி மாவட்ட எஸ்பி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த மாநாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் எஸ்பியிடம் இருந்து கார்த்திக் தரப்புக்கு கடிதம் வந்துள்ளது.
அதே நாளில் தேனி அருகே உள்ள ஆண்டிப்பட்டியில் அதிமுக விவசாய அணி சார்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடக்கிறது. இதையே காரணம் காட்டி கார்த்திக் விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.