மழையால் சென்னை கிரிக்கெட் போட்டி ரத்து
சென்னை:
சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையே நடக்கவிருந்த ஒரு நாள்கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இரு நாடுகளுக்கிடையேயான 3வது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்க இருந்தது. கடும் மழைகாரணமாக ஸ்டேடியத்தின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கிவிட்டது. பிட்ச் நனையாமல் இருப்பதற்காக தார்பாய்கள்போடப்பட்ட போதிலும், மைதானம் முழுவதுமாக நனைந்துவிட்டது.இரு தரப்பினரும் குறைந்தபட்சம் 20 ஓவர்கள் கூட விளையாட முடியாத அளவுக்கு மழையும், நேரமும் இடையூறாக இருந்தால்போட்டி ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டது.
இந் நிலையில் ஸ்டேடியத்தை பிற்பகலில் அம்பயர்கள் இரண்டு முறை சோதனையிட்டனர். விளையாட முடியாத அளவுக்குஸ்டேடியம் நனைந்துவிட்டதாலும் தொடர்ந்து மழையும் பெய்து வருவதாலும் ஆட்டத்தை ரத்து செய்வதாக அம்பயர்கள்அறிவித்தனர்.
இதற்கிடையே போட்டியைக் காண கொட்டும் மழையிலும் காலை 8 மணி முதலே ரசிகர்கள் கிரிக்கெட் மைதானத்தில் குவியஆரம்பித்திருந்தனர். ஸ்டேடியத்துக்குள் செல்லும் 18 வாசல்களிலும் நீண்ட வரிசையில் நின்றிருந்த ஆண்கள், பெண்கள்,குழந்தைகளை தீவிர பரிசோதனைக்குப் பின் ஸ்டேடியத்துக்குள் போலீசார் அனுமதித்தனர்.
போட்டியை ஒட்டி 5,000க்கும் அதிகமான போலீசார் ஸ்டேடியத்தைச் சுற்றி குவிக்கப்பட்டனர். தீயணைப்பு வண்டிகள்,கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வஜ்ரா வண்டிகள் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
சென்னையில் இன்று காலையில் மழை கொஞ்சம் நின்றதால் போட்டி நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், 11மணியளவில் மழை ஒரு பிடி பிடித்தது. இதனால் ரசிகர்கள் முகத்தில் இருந்த உற்சாகமும் முழுவதுமாகத் தொலைந்து போனது.
போட்டி நடக்குமோ இல்லையோ என்ற கவலையெல்லாம் இல்லாமல் ஸ்டேடியத்துக்கு வெளியே வழக்கம்போல் தேசியக் கொடி,கொடி போட்ட பனியன், தொப்பி வியாபாரம் சூடாக நடந்தது.
சிக்ஸர், பவுண்டரி என எழுதப்பட்ட அட்டைகள் வியாபாரமும் பரபரப்பாக நடந்தது. அதைவிட ஒரு பக்கம் குடை வியாபாரம்படு ஜோராக நடந்தது.
10 ரூபாய் கொடுத்தால் முகத்தில் மூவர்ணக் கொடியை வரைந்து விடும் ஆட்களும் கையில் பெயிண்ட், பிரஷ்ஷோடு ரசிகர்களைச்சுற்றி வந்தனர். பலரும் காசு கொடுத்து முகத்தில் கலர் அடித்துக் கொண்டு கலக்கலாக வலம் வந்தனர்.
சென்னையில் இதற்கு முன் மழையால் கேன்சலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் குறித்து ரசிகர்கள் பரபரப்பாக பேசிக்கொண்டனர்.
2003ம் ஆண்டில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி, 2004ல் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலானடெஸ்ட் போட்டி ஆகியவை மழையால் கோவிந்தா ஆனது குறித்து ரசிகர்கள் கவலையோடு விவாதித்துக் கொண்டிருந்தனர்.
இந் நிலையில் மூன்றாவது முறையாக மழையால் சென்னை கிரிக்கெட் போட்டி ரத்தாகிவிட்டது. இந்தத் தகவல் ஒலிப் பெருக்கிமூலம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு குவிந்திருந்த சுமார் 20,000 ரசிகர்களும் மிகுந்த கவலையோடு ஸ்டேடியத்தைவிட்டுக் கலைந்து சென்றனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி வரும் 25ம் தேதி கொல்கத்தாவிலும் 28ம் தேதி மும்பையிலும் நடக்கிறது.
டெஸ்ட்: திராவிடே கேப்டன்
இந் நிலையில், இலங்கைக்கு எதிரான 3 கிரிக்கெட் போட்டி தொடர்களுக்கும் ராகுல் திராவிடே கேப்டனாக இருப்பார் என இந்தியகிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ராகுல் திராவிட் அணியை நல்ல முறையில் கட்டுப்பாட்டுடன் நடத்தி செல்கிறார். எனவே டிசம்பர் 2ம் தேதி தொடங்கவுள்ளஇந்திய-இலங்கை அணிக்கு இடையேயான 3 கிரிக்கெட் போட்டி தொடர்களுக்கும் அவரே கேப்டனாக நீடிப்பார் என்று வாரியச்செயலாளர் எஸ்.கே. நாயர் தெரிவித்தார்.
கங்குலி கேப்டனாக இல்லை என்றாலும் அணியில் தொடர்ந்து விளையாடுவாரா என்று கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழு தலைவர்கிரன் மோரேயிடம் கேட்டதற்கு,
இன்று நடக்கவுள்ள 5 நபர்கள் ஆலோசனைக் குழுவில் கங்குலி அணியில் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.தற்போது திராவிட் நல்ல அணித் தலைவராக இருந்து திறமையை காட்டியுள்ளார். அதனால் 2007ம் ஆண்டு நடக்கவுள்ளஉலககோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரை அணித் தலைவராக நீட்டிப்பது என்று முடிவெடுத்துள்ளோம்.
கங்குலியை நாங்கள் அணியைவிட்டு நீக்கிவிடவில்லை. அவர் தென்-ஆப்பிரிக்காவிற்கு எதிரான அடுத்த 2 போட்டிகளிலும்விளையாட வாய்ப்பிருக்கிறது. அதை ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications