பழனி-கொடை, திருப்பதி பாதைகளில் நிலச்சரிவு
பழனி - காளஹஸ்தி:
தமிழகம் மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் கன மழை காரணமாக பழனி-கொடைக்கானல் மலைப் பாதையிலும், திருப்பதி-திருமலை இடையிலான மலைப் பாதையிலும் நிலச் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் இந்த இரு பாதைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.திருமலையில் இருந்து கீழ் திருப்பதிக்கு செல்லும் சாலையில் மழையால் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அந்தவழியாக வந்த பஸ் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியது.
சாலையின் தடுப்பு சுவர் இடிந்ததால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மலைக்கு செல்லும் வாகனங்களும்,இறங்கும் வாகனங்களும் முதல் சாலை வழியாகவே சென்றன. முதல் சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் 2 சாலையிலுமேநேற்று இரவு முதல் அதிகாலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காலையில் ஒரே சாலையில் மட்டும் பஸ் போக்குவரத்து நடைபெற்றது. இதனால் வாகனங்கள் மெதுவாக சென்று வந்தன.திருமலையில் அதிக அளவு மழை பெய்ததால் மலையில் தண்ணீர் அருவி போல் கொட்டியது.
இதே போல் தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மதுரை, விருதுநகர், நெல்லை, தஞ்சை, நாகை,புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலூரில் மிக பலத்த மழை பெய்துகண்மாய்கள் நிரம்பியதால் சுமார் 1,500 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
அதே போல கன மழை காரணமாக, பழனி-கொடைக்கானல் இடையிலான பாதையிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள்உருண்டு விழுந்ததால் சாலைகள் அடைபட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.