தென் மாவட்டங்களில் இருந்து சென்னை துண்டிப்பு
சென்னை:
மிக முக்கிய ரயில் மார்க்கமான சென்னை-மதுரை பாதையும், சென்னை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையான எண்-45ம்வெள்ளத்தால் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுவிட்டன. சாலையும் தண்டவாளமும் நீரில் அரித்துச் செல்லப்பட்டுவிட்டன.
நீரில் மூழ்கிய சேலம் மணிமுத்தாறு பாலம் |
இதன் காரணமாக சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான பஸ்கள் ஆங்காங்கே வழியிலேயே நிற்கின்றன. சுமார் 3,000 பஸ்கள்வரை சென்னை-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நிற்பதாக செய்திகள் வருகின்றன.
இந்த கன மழைக்கு மாநிலத்தில் இதுவரை 82 பேர் பலியாகிவிட்டனர். இதற்கிடையே தமிழகத்திலும் புதுவையிலும் மேலும் 24மணி நேரத்துக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளம் காரணமாக சுமார் 30,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நீரால் விழுப்புரம் நகருக்குள் வெள்ளம் புகுந்து பஸ் நிலையத்தை மூழ்கடித்துள்ளது. அதே போல 30 கிராமங்களைச் சேர்ந்தமக்களும் நீரால் சூழப்பட்டுள்ளனர். விழுப்புரம் நகரில் பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
மேலும் சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் குச்சிப்பாளையம் என்ற இடத்தில் தரைப் பாலத்தின் மீது வெள்ளம் ஓடுகிறது.இதனால் பஸ்கள் வேறு மார்க்கத்தில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
அதே போல பண்ருட்டியிலும் மழையால் பல்வேறு கிராமங்கள் தத்தளித்து வருகின்றன. கெடிலம் நதியின் மீதான பாலம் நீரில்மூழ்கிவிட்டதால் சென்னை-தஞ்சாவூர் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.