முதலிடம்: ஜெவுக்கு ஸ்டாலின் பாராட்டு
தொட்டியம்:
தமிழகத்தில் திமுக அரசு கொண்டு வந்த சிறந்த திட்டங்களையெல்லாம் முதல்வர் ஜெயலலிதா நீக்கிவிட்டதாக திமுக துணைப்பொதுச் செயலாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தொட்டியம் தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:தமிழகம் மதுபானக்கடை, எய்ட்ஸ், கொள்ளையடித்தல், லஞ்சம், ஊழல் இவற்றில் தான் முதலிடம் வகித்து வருகிறது.
துறையூரிலிருந்து வரும்போது இந்த சாலை தான் நாமக்கல் செல்லும் பிரதான சாலை என்று என்னுடன் வந்தவர்கள் கூறினார்கள்.பிரதானச் சாலையே இந்த கதி என்றால், கிராமப் புறங்களுக்கு செல்லும் சாலைகள் எப்படியிருக்கும் என்று நினைத்து பாருங்கள்.திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் இவ்வாறு நடக்குமா?
கருணாநிதி முதல்வராக இருந்தபோது அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், விதவை மறுவாழ்வு, கர்ப்பிணிப்பெண்களுக்கு உதவி தொகை, உழவர் சந்தை, பெரியார் நினைவு சமத்துவபுரம், இலவச பஸ் பாஸ் போன்ற எண்ணற்றதிட்டங்களால் லட்டசக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர்.
திமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை இந்த ஜெயலலிதா அரசு நீக்கிவிட்டது. மக்களை பற்றிகவலைப்படுவதே இல்லை இந்த அரசு. ஆனால் இப்போது கவலைப்படுவது ஏன்? தேர்தல் வரப்போகிறது. இதனால் புதுப்புதுதிட்டங்களை அரசு அறிவித்து வருகிறது.
திமுக முயற்சியால் மத்திய அரசு சேது சமுத்திர திட்டம், தமிழ் செம்மொழி, கைத்தறி நெசவாளர்களுக்கு சென்வாட் வரி நீக்கம்போன்ற எண்ணற்ற சலுகைகளைப் பெற்றுத் தந்துள்ளது என்பதை மனதில் எண்ணி வரும் தேர்தலில் சரியான முடிவை கொடுக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றினோம். பின்னர் நடைபெற்ற 2 இடைத்தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். ஆகவே நாம் எதையும் நம்பி ஏமாந்துவிடக்கூடாது.நம்மை நாமே நம்பி பொறுப்புகளை நம்மிடமேஒப்படைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
மத்தியில் இருந்த மத வெறி ஆட்சியை அகற்றிவிட்டோம். அதே போல தமிழகத்தில் நடைபெறும் மதம் பிடித்த ஆட்சியை வரும்தேர்தலில் தோற்கடித்து விரட்ட வேண்டும்.
திமுக ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட 10,000 சாலைப்பணியாளர்களை பதவி ஏற்றவுடன் நீக்கி உத்தரவிட்டு, உயர்நீதிமன்றம்வேலை வழங்க உத்தரவிட்டும் அதை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இன்னமும் அவர்களுக்கு பணி வழங்காமல்72க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் உயிரிழக்க காரணமாக அமைந்தவர் ஜெயலலிதா.
திட்டப்பணியில் கமிஷன் பெறுவது, வெள்ள நிவாரணத்தில் கொள்ளை அடிப்பது, ஏன் சுனாமி நிதியில் கூட கொள்ளை அடித்ததுதான் ஜெயலலிதாவின் சாதனை என்றார் ஸ்டாலின்.