பாண்டிச்சேரிக்கு போனாலும் ஜெயேந்திரர் வழக்கை விட மறுக்கும் தமிழக அரசு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பில் யார் ஆஜராவது என்றபிரச்சனை வெடித்துள்ளது.
இந்த வழக்கு தான் தமிழகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளதே தவிர, அரசுத் தரப்பில் நாங்கள் தான்ஆஜராவோம் என தமிழக அரசு வழக்கறிஞரும், பாண்டிச்சேரிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் நாங்கள் தான் அரசுத் தரப்பில்ஆஜராக வேண்டும் என அம் மாநில வழக்கறிஞரும் வாதாடினர்.இந்த கொலை வழக்கு விசாரணை நேற்று பாண்டிச்சேரி முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி சின்னப் பாண்டி முன்தொடங்கியது. அப்போது பாண்டிச்சேரி அரசு வழக்கறிஞர் சண்முகம் எழுந்து, வழக்கு புதுவைக்கு மாற்றப்பட்டுள்ளதால் அரசுத்தரப்பில் ஆஜராகி வாதாட எங்களுக்கு அனுமதி தர வேண்டும் என்றார்.
இதை ஜெயேந்திரரின் வழக்கறிஞர் தினகரனும் ஆதரித்தார்.
இதையடுத்து எழுந்த தமிழக அரசு வழக்கறிஞர்களான கந்தசாமி, சண்முகம் ஆகியோர் எழுந்து, வழக்கு மட்டும் தான் இடம்மாறியுள்ளது. இந்த வழக்கில் எங்களைத் தான் ஆஜராகி வாதாட தமிழக அரசு நியமித்துள்ளது என்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் வரையறைக்குள் தான் பாண்டிச்சேரி நீதிமன்றம் வருகிறது. இதனால் தமிழக வழக்கறிஞர்களானநாங்கள் இதில் ஆஜராகி வாதாட முழு உரிமை உண்டு என்றனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சின்னப்பாண்டி, இது குறித்து தமிழக அரசு வழக்கறிஞர்கள் தனியாக ஒரு மனு தாக்கல்செய்யலாம். அதனை விசாரித்த பின்னர் யார் வழக்கை நடத்துவது என்று முடிவு செய்யப்படும்.
அதுவரை இந்த வழக்கை வரும் டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன் என்றார்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணை முதன் முதலாக பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் தொடங்கியதால் ஜெயேந்திரர், விஜயேந்திரர்,ரகு, சுந்தரேச அய்யர், அப்பு, கதிரவன், அப்ரூவர் ரவிசுப்பிரமணியம் உள்ளிட்ட 23 பேரும் ஆஜராகியிருந்தனர்.












Click it and Unblock the Notifications