கடலூர்: ஹெலிகாப்டரில் இருந்து உணவு மூட்டை விழுந்து விவசாயி பலி
கடலூர்:
கடலூர் அருகே ஹெலிகாப்டரில் இருந்து போடப்பட்ட உணவு மூட்டை விழுந்து கழுத்து எழும்பு முறிந்த தொழிலாளி பலியானார்.
பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடலூர் அருகே உள்ள பூண்டியாங்குப்பம் பகுதி நீரில் மூழ்கியது. மக்கள் மொட்டை மாடிகளிலும், குடிநீர்த் தொட்டிகளிலும், மரங்களிலும் ஏறி நின்று உயிருக்குப் போராடினார்.
இப் பகுதிக்கு ஹெலிகாப்டரில் இருந்து உணவு மூட்டைகள் போடப்பட்டன. அப்போது முத்துவேல் (வயது 50) என்ற விவசாயி ஒருவரின் மீது உணவு மூட்டை விழுந்தது. ஹெலிகாப்டரில் இருந்து பயங்கர வேகத்தில் வந்து விழுந்த அந்த மூட்டையால் அவரது கழுத்து எலும்பு உடைந்துவிட்டது.
இதில் மயக்கமடைந்த முத்துவேலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக் கூட முடியவில்லை. நீர் கொஞ்சம் வடிந்த பிறகே படகு மூலம் சில இளைஞர்கள் அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.ஆனால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் புதுவை அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.
அங்கு கோமா நிலையில் இருந்த முத்துவேலின் நிலைமை மிகவும் மோசமானது. அவரை சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
ஆனால், பணம் இல்லாதாதால் முத்துவேலை அவர்களது வீட்டினரால் சென்னைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. இதையடுத்து நிருபர்கள் சிலர் தலையிட்டு பாண்டிச்சேரி அமைச்சர்களிடம் பேசி, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தந்தனர்.
இதைத் தொடர்ந்து சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டார் முத்துவேல். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் பலியாகிவிட்டார்.