தண்டவாள விரிசல்: கொடியுடன் ஓடி ரயிலை நிறுத்திய ஊழியர்- பெரும் விபத்து தவிர்ப்பு
சென்னை:
தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த பெரிய விரிசல் குறித்து என்ஜின் டிரைவருக்கு ரயில்வே ஊழியர் சரியான நேரத்தில் தகவல் தந்ததால் மிகப் பெரும் விபத்தில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 7 மணியளவில் செங்கல்பட்டு-மதுராந்தகம் இடையே படாளம் ரயில் நிலையத்தைத் தாண்டி அந்த ரயில் வந்தபோது, சிவப்புக் கொடியை ஆட்டியபடி ஒருவர் எதிர் திசையில் தண்டவாளத்தை ஒட்டி ஓடி வந்தார்.இதையடுத்து ரயிலை டிரைவர் உடனடியாக நிறுத்தினார்.
தண்டவாளத்தில் விரிசல்:
டிரைவர் கீழே இறங்கிச் சென்றபோது, சிவப்புக் கொடியுடன் ஓடி வந்தது ரயில்வே ஊழியர் ஆதிகேசவன் என்று தெரியவந்தது.
தண்டவாளத்தில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஆதிகேசவன் ஈடுபட்டிருந்தபோது, ஓரிடத்தில் மிகப் பெரிய விரிசல் இருந்ததைத் கண்டுபிடித்தார். அப்போது ரயில் வரும் ஓசையும் கேட்கவே, அதை நோக்கி வெகு தொலைவுக்கு ஓடி வந்துள்ளார்.
இதனால் ரயில் அவசர பிரேக் போடப்பட்டு நிறுத்தப்பட்டது. இல்லாவிட்டால் 1,500 பயணிகளுடன் வந்த அந்த ரயில் பெரிய அளவில் விபத்தை சந்தித்திருக்கும்.
நிறுத்தப்பட்ட ரயிலின் கார்டு உடனடியாக இத் தகவலை சென்னை அதிகாரிகளுக்கு செல்போன் மூலம் தெரிவித்தார். இதையடுத்து அந்தப் பாதையில் சென்ற எல்லா ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
விரிசல் அடைந்த தண்டவாளத்துக்கு அருகே நிறுத்தப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளில் பெரும்பாலானவர்கள் 5 கி.மீ. நடந்து சாலைக்கு வந்து அங்கிருந்து செங்கல்பட்டு செல்லும் பஸ்களில் ஏறினர்.
இதனால் அந்த வழியாகச் சென்ற பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. செங்கல்பட்டில் இருந்து சென்னை செல்லும் பஸ்களும் நிரம்பி வழிந்தன.
ரயில் பாதை காலை 9 மணிக்கு சரி செய்யப்பட்டு நிறுத்தப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் கிளம்பிச் சென்றன.