மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மேட்டூர்:
முழு அளவில் நிரம்பியுள்ள மேட்டூர் அணையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து மேட்டூர் அணைப் பகுதியில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அணைக்கு தீவிர பாதுகாப்பும்போடப்பட்டுள்ளது.மேட்டூர் அணை 4 ஆண்டுகளுக்குப் பிறகு முழு அளவில் நிரம்பியுள்ளது. ஒரே ஆண்டில் 3வது முறையாக நிரம்பி சாதனைபடைத்துள்ளது. இந் நிலையில் மேட்டூர் அணையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மேட்டூர் போலீஸாருக்குத் தகவல்வந்தது.
இதையடுத்து மோப்ப நாய் சகிதம் போலீஸார் மேட்டூர் அணைக்கு விரைந்தனர். அணையின் அனைத்துப் பகுதியிலும், அருகில்உள்ள அணைப் பூங்காவிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அணைப் பூங்காவுக்கு வருவோரிடமும் சோதனைநடத்தப்பட்டது.
இந்தச் சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இருப்பினும் அணைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு தினமான வரும் 6ம் தேதியையொட்டி போலீஸ் பாதுகாப்பு ஒரு வாரம் நீடிக்கும் என்றுதெரிகிறது.