குஷ்பு வழக்குகளுக்கு உயர்நீதிமன்றம் தடை
சென்னை:
கடந்த வாரம் வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் 12 வழக்குகளிலும், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கீரனூர் உள்பட 5வழக்குகளிலும் குஷ்பு இடைக்கால தடை வாங்கினார்.
திருச்செங்கோடு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடிகை சுஹாசினி மட்டுமல்லாது குஷ்பு மீதும் முத்துசாமி என்பவர் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று ஆஜராக வேண்டும் என்று குஷ்புவிற்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது.
இதே போல கார்த்திகேயன் என்பவர் வந்தவாசி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குஷ்பு மீது வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கில் வரும் 12ம் தேதி ஆஜராக வேண்டும் என்று அந்த நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இந்த இரு சம்மன்களை ரத்து செய்வதுடன், வழக்கு விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று குஷ்பு சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். யாரையும் புண்படுத்தும் நோக்கில் நான் கருத்துக்களை கூறவில்லை என்றும்,வேண்டும் என்றே என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த இரு வழக்குகளையும் நீதிபதி டி.வி. மாசிலாமணி நேற்று விசாரித்தார். குஷ்புவுக்கு திருச்செங்கோடு, வந்தவாசி ஆகிய 2நீதிமன்றங்கள் அனுப்பிய சம்மனுக்கும், மேற்கொண்டு விசாரிப்பதற்கும் நீதிபதி இடைக்கால தடை வழங்கினார். எனவே குஷ்புமீது தொடரப்பட்ட 19 வழக்குகளுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
3வயது சிறுமி கொலையை மறைத்த வழக்கு:
இதற்கிடையே 3வயது சிறுமி கொலையை மறைத்ததாக குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்கில் புதிய மனு ஒன்று நேற்றுநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் குஷ்புவை சாட்சியாக வரவழைத்து விசாரிக்க வேண்டும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரப்பத்திரிகைகளுக்கு குஷ்பு அளித்த பேட்டியில் நட்சத்திர ஓட்டலில் 3 வயது சிறுமி கற்பழித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது பற்றி அவர் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல்மறைத்துள்ளார்.இது தொடர்பாக வழக்கறிஞர் ரவிச்சந்திரன் என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இது தொடர்பாகமாஜிஸ்திரேட் அல்லது டிஜிபி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கை மாஜிஸ்திரேட் மகாராஜன்விசாரித்து வந்தார்.
நேற்று இந்த வழக்கு விசாரணையின் போது திருவல்லிக்கேணியை சேர்ந்த சதீஸ் என்பவர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இந்த மனுவில் குஷ்புவை சாட்சியாக வரவழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் எந்த நட்சத்திர ஓட்டலில் இந்த சம்பவம்நடந்தது என்பது பற்றியும் அவரிடம் விசாரிக்கலாம் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் மகாராஜன் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்இப்போது தாக்கலாகியுள்ள மனு ஆகியவை தீவிரமாக ஆராயப்படும் என்றார். பிறகு இந்த வழக்கு விசாரணையை வரும் 15ம்தேதிக்கு தள்ளி வைத்தார்.