நெருங்கும் புயல்: இப்போது 800 கி.மீ. தொலைவில்...!
சென்னை:
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது.இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் நிலவரப்படி சென்னைக்கு 800 கி.மீ. தொலைவில் இந்தப் புயல்நிலை கொண்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் 3 புயல் சின்னங்கள் உருவாகி சென்னை உள்பட தமிழகத்தின் 22 மாவட்டங்களை மழை புரட்டிப் போட்டது.வெள்ளக் காடாகிய மாவட்டங்கள் இப்போது தான் இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளன.
இந் நிலையில் அந்தமானுக்கு அருகே சென்னையிலிருந்து சுமார் 2,000 கி.மீ. தொலைவில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 3நாட்களுக்கு முன்பு உருவானது.
இது இப்போது வலுவடைந்து புயல் சின்னமாக மாறி தமிழகக் கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்றிரவு சென்னைக்கு1,000 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்த இந்தப் புயல் சின்னம் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து பிற்பகலில் 800 கி.மீ.தூரத்தை அடைந்துவிட்டது.
இதனால் நாளை (வியாழக்கிழமை) மாலை முதல் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனத்த மழைபெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.இந்த புயல் சின்னத்தின் நகர்வை அமெரிக்க கடற்படையும் தனது செயற்கைக் கோள்கள், ரேடார்கள் மூலம் துல்லியமாகக்கணித்துள்ளது. அதன்படி வியாழக்கிழமை இந்தப் புயல் சின்னம் தமிழக கடலோரத்தை நெருங்கும். இதனால் சென்னைஉள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எங்கு கரையைக் கடக்கும் என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், இப்போதைய போக்கிலே நகர்ந்துவந்தால் வெள்ளிக்கிழமை அது வட தமிழக பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வியாழக்கிழமைமுதல் தொடர்ந்து கன மழை பெய்யும்.
இதையடுத்து மீண்டும் வெள்ள நிலைமையை சமாளிக்க மாநில அரசு தயாராகி வருகிறது.