கருணாநிதி விழாவுக்கு போலீஸ் திடீர் தடை
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதிக்கு ராஜாஜி விருது வழங்கும் விழாவை, சென்னை ராஜாஜி நினைவிடத்தில் நடத்த போலீஸார் தடைவிதித்தனர்.
ராஜாஜியின் 127வது பிறந்த நாளையொட்டி, திமுக தலைவர் கருணாநிதிக்கு ராஜாஜி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தவிருது வழங்கும் நிகழ்ச்சி, கிண்டி ராஜாஜி நினைவிடத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் ராஜாஜி நினைவிடத்தில் விழாவை நடத்த சென்னை காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. கோட்டூர்புரத்தில்மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ராஜாஜி நினைவிடம், காமராஜர் நினைவிடம் ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனவே இங்கு விழாக்கள் நடத்தக் கூடாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் காரணம் காட்டி கருணாநிதிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்த போலீஸார் தடை விதித்து விட்டனர். இதைத்தொடர்ந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் அரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு விழா நடைபெறும் என ராஜாஜிபவுண்டேஷன் அறங்காவலர் சி.ஆர்.கேசவன் அறிவித்துள்ளார்.
ராஜாஜி நினைவிடத்தில் விழா நடத்த முதலில் அனுமதி கொடுத்து விட்டு பின்னர் அதை ரத்து செய்த காவல்துறைக்கு திமுககண்டனம் தெரிவித்துள்ளது.