ஜெயேந்திரரை கைது செய்ய 20 வரை தடை
சென்னை:
திருவாரூர் மாவட்டம் பெரியகுடி கிராமத்தில் உள்ள செளந்தரநாயகி அகஸ்தீஸ்வரர் கோவிலில் நவரத்தினக் கற்களை திருடிவிட்டதாக ஜெயேந்திரர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் அவரை வருகிற 20ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்றுகாவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரியகுடி செளந்தரநாயகி உடனுறை ஸ்ரீஅகஸ்தீஸ்வரம் கோவிலில், பீடத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர,கோமேதக, மரகத கற்களை ஜெயேந்திரர் மருந்து சாத்துவதாக கூறி எடுத்துச் சென்றதாகவும், ஆனால் இதுவரை திருப்பித்தரவில்லை என்றும் கூறி அவர் மீது கோட்டூர் போலீஸ் நிலையத்தில், மன்னார்குடியைச் சேர்ந்த சுரேஷ் என்கிற கிருஷ்ணன் புகார்கொடுத்துள்ளார்.இதன் அடிப்படையில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து முன் ஜாமீன்கோரி ஜெயேந்திரர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் இது தன் மீது பழிவாங்கும் நோக்கில் கொடுக்கப்பட்ட புகார். எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றுகோரியுள்ளார். இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று நேற்று இரவு 10.15 மணியளவில் தலைமை நீதிபதிஏ.பி.ஷாவிடம், ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, நீதிபதி சர்தார் சக்காரியாவை மனுவை விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி நீதிபதிசக்காரியா மனுவை விசாரித்தார். அப்போது, ஜெயேந்திரர் கைது செய்யப்படக் கூடும் என்ற அச்ச நிலை உள்ளதால், அவருக்குஇடைக்கால முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் வாதாடினர்.
இதை ஏற்ற நீதிபதி வருகிற 20ம் தேதி வரை ஜெயேந்திரரைக் கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார். மேலும் மனு மீதானவிசாரணையை வருகிற 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.