நாளை ராகுல் விளையாடுவாரா? கங்குலி நீக்கம்: பாராளுமன்றம் அதிருப்தி
அகமதாபாத்:
அகமதாபத்தில் நாளை நடைபெறவுள்ள இந்திய-இலங்கை 3வது கிரிக்கெட் போட்டியில் கேப்டன் ராகுல் டிராவிட் உடல்நலக்குறைவு காரணமாக விளையாடமாட்டார் என்று தெரிகிறது. இதையடுத்து நாளைய போட்டியை சேவாக் தலைமை ஏற்றுவழிநடத்துவார் என்று தெரிகிறது.
கேப்டன் ராகுல் டிராவிடுக்கு தொண்டையில் வலி ஏற்பட்டதன் காரணமாகவும், உடல்வலி காரணமாகவும் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் ராகுலின் உடல் நலத்தில் ஏற்படும்முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.அவர் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால் இன்று மாலை அவர் மருத்துவமனையில் இருந்து அனுப்பபட்டுவிடுவார்.இருந்தாலும் அவருக்கு ஓய்வு தேவை என்று டாக்டர்கள் கூறியிருப்பதால் நாளை போட்டியில் ராகுல் இடம் பெறுவது சந்தேகம்தான் என்று இந்திய அணியின் செய்தி தொடர்பாளர் பாலதித்யா கூறினார்.
கங்குலி நீக்கம்:பாராளுமன்றத்தில் கேள்வி:
இதற்கிடையே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கங்குலி, டெல்லி போட்டியில் சிறப்பாக விளையாடிய போதிலும்இலங்கைக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இது நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடையே பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.கங்குலியின் சொந்த இடமான கொல்கத்தாவில் அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து பஸ்-ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது இந்த பிரச்சினை பாராளுமன்றம் வரை சென்று விட்டது. கங்குலி அணியில் மீண்டும் இடம் பெறுவாரா? அல்லதுபிரச்சினைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கங்குலி அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பாரா? என்றகுழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.
கங்குலி கருத்து:
அணியில் இருந்து நீக்கப்பட்டு 3 நாட்களாகியும் எந்தவித கருத்துக்களையும் கூறாத கங்குலி முதன் முறையாக வாய் திறந்துள்ளார்.கங்குலி கூறியதாவது:
அடுத்ததாக பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிராக நடக்கும் போட்டிகளில் இடம் பிடிப்பேன். கிரிக்கெட்டில் இருந்து நான்விலகமாட்டேன். விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று கூறினார்.
இந்த நிலையில் மேற்கு வங்கங்கத்தில் உள்ள தனியார் டெலிவிஷனான ஸ்டார் அனந்தா எஸ்எம்எஸ் மூலம் கருத்து கணிப்புநடத்தியதில் 98 சதவீதம் பேர் கங்குலி நீக்கப்பட்டதற்கு அரசியல் தான் காரணம் என கூறியுள்ளனர்.
இந்திய அணியில் டெண்டுல்கருக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்ட கங்குலி, ஆட்டம் சூடு பிடித்துவிட்டால் சிக்சர்களாகவும்,பவுண்ரிகளாகவும் அடித்து விளாசுவார் என்பது தெரிந்ததே. மேற்கு வங்க மாநிலத்தில் ஒட்டு மொத்த ரசிகர்களும் இவர்பின்னால் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் போராட்டம்:
சமீபகாலமாக அவர் சரியாக விளையாடாததால் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.ஆனால் துலிப் கோப்பை போட்டியில் 2 சதங்கள் அடித்ததன் மூலம் அவர் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இதனால் இலங்கைக்கு எதிரான தொடரில் சேர்க்கப்பட்டு நல்ல ஸ்கோர் செய்தார். குறை சொல்ல முடியாத அளவுக்கு அவரதுஆட்டம் இருந்தபோதிலும் அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் நீக்கி உள்ளது கொந்தளிப்பான நிலையை உருவாக்கியுள்ளது.
கொல்கத்தாவில் இன்று 4வது நாளாக கங்குலி நீக்கப்பட்டதை கண்டித்து போராட்டங்கள் நடந்தன. வரும் 20ம் தேதி நாடுதழுவிய பந்த் நடத்தப்போவதாக ரசிகர்கள் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.
அரசியல் தலைவர்கள் கண்டனம்:
மேற்கு வங்காள முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச் சார்யாவும் கங்குலி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கங்குலி நீக்கத்தால் மாநிலத்தில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. அவர் நன்றாக விளையாடிய நேரத்தில் நீக்கியுள்ளார்கள். எனவேஅவர் நீக்கத்துக்கான காரணம் என்ன? யார் பொறுப்பு? என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியதலைவர் சரத்பவாரை அவர் கேட்டுள்ளார்.
இதே போல மத்திய ராணுவ அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்உள்பட பல அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
கங்குலியை நீக்கியது தேர்வுக்குழு என்ற போதிலும் இப்போது அனைத்து எதிர்ப்புகளுமே கிரிக்கெட் வாரிய தலைவர்சரத்பவாரை நோக்கி திரும்பியுள்ளன. இந்த பிரச்சினை பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டு சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியும்அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
கிரிக்கெட் வாரியம் கருத்து:
கங்குலி நீக்கத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. இது முழுக்க முழுக்க தேர்வு குழு தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று கூறியசரத்பவார் இப்போது தேர்வு குழுவிடம் இது பற்றி விசாரிப்பேன் என்று கூறுகிறார். பிரச்சினை பெரிதாகிவிட்டதால் சுமூகமாகதீர்க்க அவர் முயற்சித்து வருகிறார்.
கங்குலி நீக்கம் குறித்து தேர்வு குழு தலைவர் கிரண்மோரே கூறும் போது கங்குலிக்கு பாதை அடைக்கப்படவில்லை. திறந்தேஇருக்கிறது என்று கூறினார். கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா கூறும்போது அகமதாபாத் போட்டி நடக்கும் போதுபாகிஸ்தான் செல்லும் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் அதில் கங்குலிக்கு இடம் கிடைக்கலாம் என்று சூசகமாக தெரிவித்தார்.
விரைவிலேயே வீரர்கள் பட்டியலை வெளியிட்டு விட்டால் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்று கிரிக்கெட்வாரியம் கருகிறது. இதற்கிடையே சரத்பவார் மீது குற்றச்சாட்டு எழுந்தாலும் பயிற்சியாளர் சேப்பல், கேப்டன் டிராவிட்ஆகியோரின் எதிர்ப்பால் தான் கங்குலி நீக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.