எம்ஜிஆர் நகர் முழுவதும் பிணங்களின் ஊர்வலம்: ஒரே இரவில் 26 உடல்கள் அடக்கம்!
சென்னை:
அரசு மருத்துவமனையில் கிடக்கும் பிணங்கள் |
எம்.ஜி.ஆர் நகரில் நிவாரண உதவிகள் பெறச் சென்று பலியான 26 பேரின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு அடக்கம்செய்யப்பட்டது.
உதவிகள் பெறச் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி 26 பெண்கள் உள்பட 42 பேர் பலியாகிவிட்டனர். இவர்களது உடல்கள் பிரேதப்பரிசோதனை செய்யப்படாமல் அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டன.
பெற்றவளின் பிணத்தோடு கதறும் சிறுவன் |
இதில் 26 பேரின் உடல்கள் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) அடக்கம் செய்யப்பட்டன. இதனால் எம்.ஜி.ஆர். நகர்,ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பிண ஊர்வலமாக இருந்தது.
3 பேரின் உடல்கள் வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இன்னும் 15 பேரின் உடல்கள், பல்வேறு உறவினர்களின்வருகைக்காக மருத்துவமனைகளிலேயே வைக்கப்பட்டுள்ளன. அவை இன்று ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்படும் எனத்தெரிகிறது.
ஆம்புலன்ஸ்களில் உடல்கள் |
ஒருபக்கம் கன மழையும், பிணங்களுடன் எம்.ஜி.ஆர். நகர் வாசிகள் விட்ட கண்ணீர் மழையும் சேர்ந்து அப்பகுதியையே பெரும்சோகக் கடலாக மாற்றியிருந்தது.
போலீஸ் விசாரணை தொடங்கியது:
இதற்கிடையே இச் சம்பவம் தொடர்பாக இன்று போலீஸ் விசாரணை தொடங்கியது.
வடபழனி உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையிலான போலீஸார் இன்று காலை எம்.ஜி.ஆர் நகருக்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், காயமடைந்து மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டிருப்போர், இறந்தவர்களின் உறவினர்கள் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், தகவல்கள் வீடியோவில் பதிவு செய்யப்படுகின்றன.
பெரும்பாலான பொதுமக்கள், சிலர் பரப்பிய வதந்தியே கூட்ட நெரிசலுக்குக் காரணம் என கூறியதாக போலீஸ் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வெள்ள நிவாரண முகாம் நெரிசலில் சிக்கி 42 பேர் பலி