சாவு எதிரொலி: சென்னை கலெக்டர் டிரான்ஸ்பர்
சென்னை:
சென்னையில் அடுத்தடுத்து இரண்டு முறை வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் சிக்கி 48 பேர் இறந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகன்அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய ஆட்சித் தலைவராக என்.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னையில் மழை வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஆரம்பத்திலிருந்தே குளறுபடிகள் நீடிக்கின்றன. முதலில் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு டோக்கன்வழங்கப்படாமல், ஆளுங்கட்சிக்குச் சாதகமானவர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந் நிலையில், கடந்த மாதம் வியாசர்பாடியில் வெள்ள நிவாரணம் பெற வந்தவர்கள் மத்தியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.அதிகாரிகளும், போலீஸாரும் வெள்ள நிவாரணம் வழங்கும் பணியை திட்டமிட்டு செய்யாமல், ஏனோ தானோவென்று மேற்கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந் நிலையில், எம்.ஜி.ஆர். நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 42 உயிர்கள் பலியாயின. இது தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
நிவாரணப் பணிகளில் குழப்பம் நீடித்து வருவதால், மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆட்சித் தலைவராகஎன்.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.