கல்வி மான் ஏ.சி.எஸ். மீது குண்டாஸ்?
சென்னை:
அரசு நிலத்தை அபகரித்தது உள்ளிட்ட 4 வழக்குகளில் தேடப்பட்டு வரும் எம்.ஜி.ஆர். நிகர் நிலைப் பல்கலைக்கழக வேந்தரும்,புதிய நீதிக் கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகம் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.
எம்.ஜி.ஆர். காலத்தில் எம்.பியாக இருந்தவர் ஏ.சி.சண்முகம். காலப் போக்கில் அதிமுகவிலிருந்து விலகி, சம்பாதித்த பணத்தைக்கொண்டு ஏகப்பட்ட கல்லூரிகளைக் கட்டினார். சொந்த ஊரான ஆரணி, வேலூர், சென்னை ஆகிய இடங்களில் இவருக்கு நிறையகல்லூரிகள் உள்ளன.பெரிய கல்விமானாக மாறிவிட்ட ஏசிஎஸ், பெரும்பாலான பிற தனியார் பொறியியல் கல்லூரிகளைப் போலவே புறம்போக்குநிலத்தை ஏக்கர் கணக்கில் வளைத்துப் போட்டுள்ளார். தமிழகத்தில் கல்வி நிலையங்களைத் திறந்த பெரும்பாலானஅரசியல்வாதிகள் நிலச் சுருட்டல் பேர்வழிகள் என்பது குறிப்பிடத்தது.
சென்னை மதுரவாயலில் பல் மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி ஆகியவை அடங்கிய எம்.ஜி.ஆர்.நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை வைத்துள்ளார் ஏசிஎஸ். இந்தப் பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான கட்டடங்கள் கூவம்ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பதால் அவற்றை அதிகாரிகள் தற்போது இடித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஏ.சி.சண்முகத்தை போலீஸார் தேடி வருகின்றனர். சொந்த ஊரான ஆரணியில்போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர்.
இந் நிலையில் கோயம்பேட்டில் உள்ள பிரமாண்டமான அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில்ஏ.சி.எஸ். பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸார் அங்கு சென்று சோதனை செய்தனர். ஆனால் கல்வித்தந்தை ஏ.சி.எஸ். அங்கு இல்லை.
அவர் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்துள்ள தகவலையடுத்து போலீஸ் தனிப் படை அங்கும் விரைந்துள்ளது.
இதற்கிடையே, ஏ.சி.எஸ்ஸை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் போலீஸார் காத்துக் கொண்டுள்ளனர். அரசு நிலத்தைஆக்கிரமித்தால் அவர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என சட்டத்தில் உள்ளது.
எனவே அரசுக்குச் சொந்தமான கால்வாய் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதால், அதிமுக அரசுக்கு மிகவும் விருப்பமானகுண்டர் சட்டம் ஏ.சி.எஸ். மீதும் பாயலாம் என்று தெரிகிறது.