இலங்கை பதற்றம்: கடலோர கண்காணிப்பு தீவிரம்
ராமநாதபுரம்:
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே மீண்டும் போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளதால், கச்சத்தீவுஉள்ளிட்ட இலங்கை கடல் பகுதிக்குள் தமிழக மீனவர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டும் போர் மேகம் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படுவதால் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல்எல்லையில் இந்திய கடற்படையும், கடலோரக் காவல் படையும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்தமீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது இந்திய எல்லையை தாண்டி விட வேண்டாம் என்றும், குறிப்பாக கச்சத்தீவு உள்ளிட்டபகுதிகளுக்கு செல்லவே கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், போர் மூண்டால் போராளிகளும், அகதிகளும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபம், பாம்பன் ஆகிய பகுதிகளுக்குவரக் கூடும் என்பதால் அங்கும் தீவிரக் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடலோரக் காவல்படை மற்றும் கடற்படைக்குச் சொந்தமான ரோந்து ஹெலிகாப்டர்கள், இந்திய, இலங்கை எல்லைப் பகுதியில்கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள 11 சோதனைச் சாவடிகளுடன் கூடுதலாக சில சோதனைச் சாவடிகள்ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.