தீயிக்கு இரையான 40 சுனாமி வீடுகள்
பொரயாறு:
சுனாமி முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியின் போது தரங்கம்பாடியில் பெரிய தீவிபத்து ஏற்பட்டு 40 சுனாமி தற்காலிகவீடுகள் எரிந்து நாசமாகின.
தரங்கம்பாடியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகரத்தால் ஆன கூரையில் தற்காலிக வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.இந்த கூரையின் வெப்பம் தாங்க முடியாமல் அதில் குடியிருக்கும் மக்கள் வைக்கோல் மற்றும் தென்னம் ஓலையை கொண்டுகூரையை வேய்ந்துள்ளனர்.இந்த நிலையில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் ஓராண்டு நினைவாஞ்சலியை அனுசரிக்கும் வகையில் தரங்கம் பாடி சுனாமிதற்காலிக குடியிருப்பு மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தனர்.
இந்த மெழுகுவர்த்தியின் தீ எதிர்பாராதவிதமாக தற்காலிக வீடுகளின் கூரையில் பற்றி ஒவ்வொரு வீடாக வேகமாக பரவியது.இதனால் அங்கிருந்த 40 வீடுகளும் தீயில் எரிந்து நாசமாயின. ஆனால் அதில் வசித்த மக்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பாகவெளியேறிவிட்டனர்.
உடனே பொரயாறு, காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் இந்த பகுதியில் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மின்சாரஇணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நாங்கள் வைத்திருந்த உடைமைகள் அத்தனையும் தொண்டு நிறுவனங்களால் தரப்பட்டது. அதை மீண்டும் நாங்கள் இழந்துவிட்டோமே என்று பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.