வருவாய்த்துறை செயலாளர் திடீர் மாற்றம்: நில விவகாரம் காரணம்?
சென்னை:
தமிழக அரசின் வருவாய்த்துறைச் செயலாளராக இருந்த சக்திஸ்கந்த தாஸ் திடீரென மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில்வைக்கப்பட்டுள்ளார். அரசு நிலத்தை அடிமாட்டு விலைக்கு இரு நிறுவனங்களுக்கு விற்பதை அவர் எதிர்த்ததால்மாற்றப்பட்டதாகத் தெரிகிறது.
சமீபத்தில் சிப்காட் நிலத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்துக்கு அடி மாட்டு விலைக்கு விற்றது அரசு. இது தொடர்பாக வழக்குத்தொடரப்பட்டுள்ளது.இந் நிலையில் சோழிங்கநல்லூரில் உள்ள அரசு நிலத்தை இரு தனியார் தகவல் தொழிலநுட்ப நிறுவனங்களுக்கு மிகக் குறைந்தவிலைக்கு விற்க அரசு முடிவு செய்ததாகத் தெரிகிறது.
ஏக்கர் சுமார் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறுமனே ரூ. 50 லட்சத்துக்கு விற்க அரசு திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. ரூ.50 லட்சம் மதிப்பில் இரு நிறுவனங்களுக்கு சுமார் 70 ஏக்கர் நிலத்தை ஒதுக்க அரசு முயன்றதாகவும், இதை வருவாய்த்துறைச்செயலாளர் சக்திஸ்கந்த தாஸ் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
நில விற்பனை குறித்து நேற்று திடீரென கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட இருந்ததாகவும், ஆனால் சக்திஸகந்ததாஸ் ஒத்துழைக்க மறுத்ததால் நில விற்பனை குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாத சூழல் உருவானதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவரை பதவியை விட்டு அரசு தூக்கி, எந்தப் பதவியும் தராமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்செய்திகள் கசிகின்றன.