ராஜபக்ஷே வருகைக்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு
சென்னை:
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவின் இந்திய வருகை உள்நோக்கம் கொண்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ்கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நார்வே தூதுக்குழு மேற்கொண்டு வந்த அமைதி முயற்சிகளை வெற்றிகரமாக சீர்குலைத்த பின்னர், தற்போது விடுதலைப்புலிகளை முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சியில் இலங்கை அதிபர் இறங்கியுள்ளார்.
இதற்கு இந்தியாவை அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தினால்தான் முடியும். அப்போதுதான் பல காலத்திற்கு இந்தப்பிரச்சினை இழுபறியாக இருக்கும் என்று நினைக்கிறார் இலங்கை அதிபர். அந்த நோக்கத்தில்தான் தற்போது அவர் இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை அவர் மறைமுகமாக தொடங்கி விட்டார். அதை மறைத்துக் கொண்டு அப்பாவி போலஇந்தியா வந்துள்ளார். இலங்கை அரசும், ராணுவமும் செய்யும் தவறுகள், விதிமீறல்களால் அங்கு பிரச்சினைஏற்படும்போதெல்லாம் உடனே இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்து விடுகிறார்கள்.
அப்போதுதான், தங்களது செயல்களுக்கு இந்தியா ஆதரவாக இருப்பதாக உலக சமுதாயம் நினைக்கும் என்பது அவர்களதுஎண்ணம்.
இலங்கை அரசின் இந்த உள்நோக்கம் கொண்ட எண்ணத்திற்கு இந்தியா அடிபணிந்து, ஏமாந்து விடக் கூடாது என்று கூறியுள்ளார்ராமதாஸ்.
முன்னதாக திரைப்படங்கள், பத்திரிக்கைகளில் ஆபாசம் அதிகரித்திருப்பதைக் கண்டித்து சென்னையில் பாமக மகளிர் அணிசார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இப் போராட்டத்தை ராமதாஸ் தொடங்கி வைத்து பேசுகையில், தமிழ் திரைப்படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை.காரணம் அதில் மிதமிஞ்சி நிற்கும் ஆபாசம். கற்பழிப்புக் காட்சிகளை விலாவாரியாக காட்டுகிறார்கள்.
அதேபோல பல பத்திரிக்கைகளும் ஆபாசத்திற்கேமுக்கியத்துவம் கொடுக்கின்றன. இன்று ஒரு பத்திரிக்கையில் ஆபாசப்படங்கள் நிறைந்து வெளியாகியுள்ளது. அந்தப் பத்திரிக்கைக்கு நச்சுன்னு இருக்கு என்று விளம்பரம் செய்கிறார்கள்.
திரைப்படங்களும், பத்திரிக்கைகளும் ஆபாசத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பாமக தீவிரப் போராட்டத்தில்குதிக்கும் என்றார் ராமதாஸ்.