புத்தாண்டு: திருப்பதி, மீனாட்சி அம்மன், ரங்கநாதர் ஆலயத்தில் அலைமோதிய பக்தர்கள்
திருப்பதி:
புத்தாண்டு தினமான நேற்று திருப்பதியில் 80,000 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அதே போல மதுரை மீனாட்சி அம்மன்ஆலயத்திலும் பெரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருப்பதியில் வெங்கடாஜலபதி கோயிலில் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று, கட்டண பூஜைகள் ரத்துசெய்யப்பட்டன. தடையின்றி தரிசனம் பார்க்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.மலையில் அமைந்திருக்கும் அனைத்து தனியார் காட்டேஜ்கள், அறக்கட்டளைகள் சார்பில் நடத்தப்படும் விடுதிகள்,தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் விடுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.
லட்டு பிரசாத விற்பனை அமோகமாக இருந்தது. புத்தாண்டு காலண்டர்கள், டைரிகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது.
திருப்பதியில் இருந்து 40 கிமீ தூரத்தில் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயில் மற்றும் 70 கிமீ தூரத்தில் உள்ள கனிப்பாக்கம்வரசக்தி விநாயகர் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. தமிழகம், கர்நாடகா ஆந்திரா ஆகிய மாநிலங்களில்இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தனர்.
இதே போல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் தேவாலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள்சுவாமி தரிசனத்திற்கு குவிந்தனர். திருச்சியில் ஸ்ரீரங்கநாதர் ஆலயம், சமயபுரம் மாரியம்மன் ஆலயம், உச்சி பிள்ளையார்கோவில் ஆகிய கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களின் சிறப்பு தரிசனத்திற்காக அனைத்து கோயில்களுமே காலை 4 மணியில் இருந்தே நடைதிறக்கப்பட்டிருந்தன.