விளையாட்டு வீராங்கனைகளை கற்பழிக்க முயற்சி: லாட்ஜ் ஊழியர்கள் கைது
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வந்த மேற்கு வங்க வீராங்கனைகளை பாலியல் பலாத்காரம் செய்யமுயற்சி நடந்தது.பாண்டிச்சேரியில் மகளிருக்கான தேசிய சப் ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. பல்வேறுமாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் இதில் கலந்து கொண்டுள்ளனர். போட்டியில் பங்கேற்றுள்ள அனைவரும் 16வயதுக்குட்பட்ட மாணவிகள்.
போட்டியில் பங்கேற்க வந்துள்ள மாணவிகள் அனைவரும் நீடராஜப்பய்யர் வீதியில் உள்ள லாட்ஜில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஒரு அறைக்கு 2 மாணவிகள் வீதம் மாணவிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மாணவிகள் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடினர். நள்ளிரவுக்கு மேல் தூங்கச்சென்றனர். அப்போது கவனக்குறைவாக அறைக் கதவுகளை மூடவில்லை என்று தெரிகிறது.
இந் நிலையில் யாரோ சிலர் மேற்கு வங்க மாணவிகள் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து அவர்களை பலாத்காரம் செய்யமுயன்றனர்.
மாணவிகள் போட்ட கூச்சலால் அனைத்து மாணவிகளும் ஓடி வந்தனர். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்துதப்பியோடிவிட்டனர். இதுகுறித்து உடனடியாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
இருப்பினும் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுக்காததால், போலீஸார் வழக்கு எதையும் பதிவு செய்யவில்லை.
ரகசியமாகவே விசாரணையை நடத்தினர். இதனால் இப்போது தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போதுஇந்த விவகாரம் குறித்து புதுவை மகளிர் ஆணையம் விசாரித்து வருகிறது.
8 லாட்ஜ் ஊழியர்கள் கைது:
இச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட விடுதியின் ஊழியர்கள் 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில் இந்த ஊழியர்கள் தான் மாணவிகளின் அறைகளுக்குள் புகுந்தனர் என்பது உறுதியாகியுள்ளது.இதையடுத்து அவர்கழ் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில், பாலியல் பலாத்கார முயற்சி குறித்து பாதிக்கப்பட்ட 4 மாணவிகள், புதுவை 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்றுகாலை ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.